மேலும் செய்திகள்
வருங்கால வைப்பு நிதி புதிய திட்ட விளக்க கூட்டம்
24-Jul-2025
திருப்பூர்; ''வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில், பதிவு செய்த நிறுவனங்களில், ஆக., 1 முதல் வரும் 2027, ஜூலை 31 வரையிலான காலத்தில், புதிதாக பணியில் சேரும் தொழிலாளருக்கு, மாத சம்பளத்துக்கு நிகரான ஊக்கத்தொகை வழங்கப்படும்; அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது. தொழில்முனைவோருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை பின்னலாடை துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று பி.எப்., அமலாக்க அதிகாரி மைதிலி கூறினார். மத்திய அரசு, பி.எப்.,ல், பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டம் தொடர்பாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) அரங்கில் நடந்த கருத்தரங்கில், மைதிலி பேசியதாவது: ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து ஆறு மாதங்கள் பணிபுரிந்த பின், முதல் தவணை தொகை வழங்கப்படும். 12 மாதங்கள் பணி புரிந்து, பி.எப்., இணையதளத்தில் உள்ள ஊழியர் நிதி சார்ந்த கல்வி அறிவு பாடத்தை முடித்தபின் இரண்டாவது தவணை தொகை வழங்கப்படும். அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்கள், ஊக்கத்தொகை பெற தகுதி பெறுகின்றனர். சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, இரண்டாவது தவணை தொகையில் குறிப்பிட்ட தொகை, அரசால் பரிந்துரைக்கப்பட்ட சேமிப்பு திட்டத்தில், டெபாசிட் செய்யப்படும். சேமிப்பு திட்டத்தின் முதிர்ச்சியின்போது, தொழிலாளர்கள் அந்த தொகையை பெறலாம். தொழிலாளர்கள் 'உமாங்' செயலியில் முக அங்கீகார தொழில்நுட்பம் வாயிலாக தங்கள் யு.ஏ.என்.,ஐ உருவாக்குவதும், செயல்படுத்துவது கட்டாயம். திட்டத்தில் வேலை வழங்கும் நிறுவனங்களுக்கும் ஒரு லட்சம் வரை சம்பளம் பெறும் ஒவ்வொரு கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கும்; இதர துறை சார்ந்த நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறும் ஒவ்வொரு கூடுதல் ஊழியர்களின் சம்பளத்தில், 10 சதவீதம், 10 ஆயிரத்துக்கு மேல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறும் கூடுதல் ஊழியருக்கு, 2 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் ஒவ்வொரு ஊழியருக்கும், 3 ஆயிரம் ரூபாய் வீதம் மாதத்துக்கு ஒருமுறை என்கிற அடிப்படையில் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு அரையாண்டிலும் வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தினரின் கேள்விகளுக்கு, பி.எப்., மண்டல கமிஷனர் அபிஷேக் ரஞ்சன் பதிலளித்தார். --- கருத்தரங்கில், பி.எப்., மண்டல கமிஷனர் அபிேஷக் ரஞ்சன் பேசினார். அருகில், 'சைமா' இணைச்செயலாளர் பழனிசாமி, தலைவர் ஈஸ்வரன்.
திருப்பூரை பொறுத்தவரை, 50 சதவீதத்துக்கும் குறைவான தொழிலாளர்களே, ஒரே நிறுவனத்தில் தொடர்ச்சியாக பணிபுரிகின்றனர். சம்பளத்தில் தொகை பிடித்தம் செய்யப்படுவதை விரும்பாமல், தொழிலாளர் பலர், வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடம் பெயர்கின்றனர். திருப்பூரின் தொழில் நெருக்கடிகளை அதிகாரிகள் உணரவேண்டும். அமெரிக்க வரி உயர்வு அறிவிப்புகளால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைந்துள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழல்களை கருத்தில் கொண்டு, பி.எப்., அதிகாரிகள் ஆய்வு பணிகளின்போது, மனிதாபிமானத்தோடு நடவடிக்கை எடுக்கவேண்டும். - ஈஸ்வரன், தலைவர், 'சைமா'
ஐம்பது தொழிலாளரை கொண்ட ஒரு நிறுவனம், இரண்டு புதிய தொழிலாளர்களையும், மொத்த தொழிலாளர், 50க்கு மேல் உள்ள நிறுவனங்கள், ஐந்து புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள், இந்த திட்டத்தில் ஊக்கத்தொகை பெற தகுதியானவை. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், புதிய தொழிலாளரை இணைத்து, ஊக்கத்தொகை பயனை பெறலாம். - மைதிலி, பி.எப்., அமலாக்க அதிகாரி
24-Jul-2025