தாலுகா மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் மூடல்
திருப்பூர்: கொரோனா தொற்று பாதிப்பு, 2020ம் ஆண்டு பல நகரங்களை ஆட்டிபடைத்தது. திருப்பூர் மாவட்டத்தில் கடைசியாக, 2023 டிச., மாதம் 82 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா அதிகாரபூர்வமாக யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. அறிகுறிகளுடன் வருவோரை பரிசோதித்தாலும், 'பாசிட்டிவ்' இருப்பதில்லை. தக்க மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி விடுகின்றனர். இந்நிலையில், தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டு, படுக்கைகளை திரும்ப பெற்று, மாற்று பயன்பாட்டுக்கு உபயோகிக்க மருத்துவ பணிகள் துறை முடிவெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மடத்துக்குளம், காங்கயம், உடுமலை, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு, படுக்கை விரைவில் திரும்ப பெறப்பட உள்ளது. அதே நேரம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.