புரட்டாசி பட்டம் செழிக்க வழிபாடு; திருமூர்த்திமலையில் திரண்ட பக்தர்கள்
உடுமலை; மகாளய அமாவாசையையொட்டி, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலையில், பழமை வாய்ந்த அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகள் ஒருங்கே அருள்பாலிக்கும் இக்கோவிலில், ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசையன்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று அமாவாசையையொட்டி, அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மலை மேலுள்ள பஞ்சலிங்க அருவியிலும், அடிவாரத்திலுள்ள பாலாற்றிலும், குளித்து மும்மூர்த்திகளை பக்தர்கள் வழிபட்டனர். உடுமலை பகுதியில், வடகிழக்கு பருவமழையையொட்டி, புரட்டாசி பட்டத்தில், மானாவாரியாக கொண்டைக்கடலை, கொத்தமல்லி மற்றும் சிறு தானியங்கள் சாகுபடி செய்வது வழக்கம். இந்த சாகுபடிகள் செழிக்க, மகாளய அமாவாசையன்று திருமூர்த்திமலைக்கு வந்து வழிபட்டு செல்வதை பாரம்பரியமாக உடுமலை பகுதி மக்கள் பின்பற்றி வருகின்றனர். கோவிலில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. உடுமலையில் இருந்து திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.