உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆல்கொண்டமால் கோவிலில் கோசாலை அமைக்கணும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை

ஆல்கொண்டமால் கோவிலில் கோசாலை அமைக்கணும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை

உடுமலை: கால்நடைகளுக்கான பிரத்யேக கோவிலான, ஆல்கொண்டமால் கோவிலில் கோசாலை அமைத்து தானமாக வரும் கன்றுகளை பராமரிக்க வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை, சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. பொங்கல் பண்டிகையின் போது, மூன்று நாட்கள் கோவிலில் நடக்கும் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.பொங்கலன்று கால்நடைகள் ஈன்றெடுக்கும் கன்றுகளை ஓராண்டு வரை பராமரித்த பிறகு, அப்பகுதி மக்கள், கோவிலுக்கு காணிக்கையாக வழங்குகின்றனர். கால்நடைகள் பெருக, கோவிலுக்கு வேண்டுதல் வைப்பவர்களும், கால்நடைகளை தானமாக வழங்குவது வழக்கம்.கிடாரி கன்று, காளை, ஆடு, சேவல் ஆகியவற்றை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கும் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. இவ்வாறு, கோவிலுக்கு வழங்கப்படும் கால்நடைகளை ஹிந்து சமய அறநிலையத்துறையினர், இரண்டு நாட்கள் கோவிலில் வைத்து பராமரித்த பின், பிற மாவட்டங்களிலுள்ள கோசாலைக்கு அனுப்புகின்றனர்.இதற்கான பராமரிப்பு செலவு என கால்நடைகளை வழங்கும் பக்தர்களிடம், ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண முறை மற்றும் இதர விதிமுறைகளால், பாதிக்கப்படும் பக்தர்கள், கன்றுகளை விலைக்கு விற்று, அதில் கிடைக்கும் தொகையை கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர்.இந்தாண்டும், 15க்கும் மேற்பட்ட கால்நடைகள் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கென பிரசித்தி பெற்ற கோவிலுக்கு வழங்கப்படும் கன்றுகளை அங்கேயே பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.அதற்கேற்ப, திருவிழாவின் போது, கோவிலுக்கு கிடைக்கும் வருவாயில், கோசாலை அமைத்து, காணிக்கையாக பெறப்படும் கன்றுகளை பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கோசாலை அமைக்க, கோவிலுக்கு சொந்தமான நிலம், கிணறு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உள்ளன. கால்நடைகளுக்கான பிரத்யேக கோவிலில், கோசாலை அமைப்பது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ