உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குத்தகைக்கு தாரை வார்க்க கூடாது l ஆண்டிபாளையம் மக்கள் தீர்மானம்

 குத்தகைக்கு தாரை வார்க்க கூடாது l ஆண்டிபாளையம் மக்கள் தீர்மானம்

திருப்பூர்: திருப்பூர், ஆண்டிபாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில், ஹிந்து அறநிலையத்துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. கோவிலுக்கு சொந்தமான, 8.98 ஏக்கர் நிலம், கோவிலின் பின்புறம் இருக்கிறது. இக்கோவில், ஆறு கிராமங்களுக்கும், அதுசார்ந்த புதிய குடியிருப்புகளுக்கும் சொந்தமானது. கார்த்திகை மாதத்தில் நடக்கும் பொங்கல் விழாவில், 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவில் நிலத்தை, மூன்று கோடி ரூபாய்க்கு கிரயம் செய்து, போலீஸ் குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு, ஆறு ஊர் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 2019ல், பணிகளை துவக்க வந்த போது, போராட்டம் நடந்தது. அதற்கு பிறகு, சென்னை ஐகோர்ட்டில் மக்கள் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், கோவில் நிலத்தை கோவிலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; எக்காரணம் கொண்டும், மற்ற பயன்பாட்டுக்கு வழங்க கூடாது என, ஊர்பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆண்டிபாளையம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, ஹிந்து அறநிலையத்துறை விற்பனை செய்யக்கூடாதென, பொதுமக்கள் சார்பில் வழக்கு தொடர்ந்தோம். கோவில் நிலத்தை விற்பனை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு தரப்பு செலுத்திய மூன்று கோடி ரூபாயை திரும்ப பெறவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஹிந்து அறநிலையத்துறை, நிலத்தை நீண்டகால குத்தகைக்கு கொடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது. அந்த முயற்சியை கைவிட வேண்டுமென, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவில் வளாகத்தில் நடந்த, ஆறு ஊர் பொதுமக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். பொங்கல் பண்டிகை காலத்தில் பயன்படுத்த வேண்டும். குத்தகைக்கு விட, ஹிந்து அறநிலையத்துறை முயற்சிப்பதை கண்டித்தும், கோவில் நிலம் கோவிலுக்கே வழங்க வேண்டும்; வேறு பயன்பாட்டுக்கு வழங்க கூடாது என, அறநிலையத்துறையை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ