கறுப்பு பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் போராட்டம்
திருப்பூர்; பணி நேரத்தில் பாதுகாப்பு இல்லையென குற்றம்சாட்டி, கோவில் பணியாளர்கள் நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். திருச்செந்துார் சுப்பிரமணியர் கோவில் கண்காணிப்பாளர் விவேக்கை, போலீஸ் ஏட்டு தாக்கிய விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணி நேரத்தில் பாதுகாப்பு இல்லையென குற்றம்சாட்டி, கோவில் பணியாளர்கள் நேற்று, கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர் யூனியன் சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பணியாளர்கள் நேற்று, கறுப்பு 'பேட்ஜ்' அணிந்து, பணியாற்றினர். மாநில முன்னாள் அமைப்பாளர் முருகராஜ், மாவட்ட தலைவர் சிவக்குமார், செயல் தலைவர் அங்கீஸ்வரன் உட்பட கோவில் பணியாளர்கள் அனைவரும், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர். கோவில் பணியாளர்கள் கூறுகையில், 'கோவில் அலுவலர் மற்றும் பணியாளருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. கோவில் நிலம் மீட்பு பணிக்கு செல்லும் போதும் இதேபோன்ற அச்சுறுத்தல் இருக்கிறது. கோவில் பணியாளர் பாதுகாப்பாக பணியாற்றுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்,' என்றனர்.