ஆக்கிரமிப்பு எச்சரிக்கை பேனர்; ஒரு வழியாக போலீசிடம் புகார்
திருப்பூர்; வருவாய்த்துறை நிலம் ஆக்கிரமிப்பு குறித்து வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகை அகற்றப்பட்டது குறித்து, நீண்ட இழுபறிக்குப் பின் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூர், நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள வருவாய்த்துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் தனியாரால் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்தது. அங்கு திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஏறத்தாழ 1.76 ெஹக்டர் அளவு இதன் பரப்பளவு உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு பல கோடி ரூபாய்.கடந்த சில மாதம் முன் இது குறித்த தொடர் புகார் மற்றும் வலியுறுத்தல் காரணமாக அந்த ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.அந்த மண்டபத்தை மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும் அங்கு அரசுக்குச் சொந்தமான இடம் என்று எச்சரிக்கை பலகை கூட வைக்கப்படவில்லை.அது குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதையடுத்து, ஒரு வழியாக அங்கு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்தனர். அத்தோடு பிரச்னை தீரவில்லை. எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே அதை யாரோ அகற்றி விட்டனர்.அதன் பின் எச்சரிக்கை பலகையை அகற்றியோர் மீது நடவடிக்கை கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அவ்வகையில் இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், போலீஸ், வருவாய்த்துறை, மாநகராட்சி என இது வரை மொத்தம் 68 புகார்கள் அளித்தனர். ஒருவழியாக இது குறித்து வடக்கு தாசில்தார் கதிர்வேல், தற்போது 62 நாளுக்குப் பின் போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.திருப்பூர் மாநகரம், கொங்கு நகர் சரக போலீஸ உதவி கமிஷனருக்கு அனுப்பியுள்ள அக்கடிதத்தில், மேற்படி அரசுக்குச் ெசாந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகையை அகற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.