விவசாயிகள் போராட்டம்; 20 நாளில் இழப்பீடு
பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். அதன்படி, நவ., 23 ம் தேதி, 'தமிழக அரசுக்கு பரிந்துரைத்து, 45 நாட்களுக்குள் இழப்பீடு பெற்றுத்தரப்படும்' என்று மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது.அதற்கு பிறகும், தெருநாய்களின் தாக்குதல் தொடர்ந்தது; இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் வாக்குறுதியை நம்பி, விவசாயிகள் அமைதி காத்தனர். அளித்திருந்த அவகாசம் முடிந்த நிலையில், பலியான ஆடுகளுக்கு இழப்பீடு கேட்டு மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடுத்த 20 நாட்களுக்குள், உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும் என, மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, காங்கயம் தாசில்தார் மோகனன், சம்பந்தப்பட்ட விவசாய அமைப்புகளுக்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் வாக்குறுதியை ஏற்று, மீண்டும் 20 நாட்கள் காத்திருப்பது என்றும், அதற்கு பிறகும், தமிழக அரசு இழப்பீடு அறிவிக்காதபட்சத்தில், அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படுமென, விவசாயிகள் அறிவித்துள்ளனர்.