உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிர்க்காப்பீடு செய்ய குறைந்த நாட்களே உள்ளது! வேளாண் துறை விழிப்புணர்வு பிரசாரம்

பயிர்க்காப்பீடு செய்ய குறைந்த நாட்களே உள்ளது! வேளாண் துறை விழிப்புணர்வு பிரசாரம்

உடுமலை ; நெல், மக்காச்சோளம், சோளம் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள குறைந்த நாட்களே உள்ளதால், விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்து கொள்ளுமாறு, வேளாண் துறை அதிகாரிகள், விழிப்புணர்வு பணி மேற்கொண்டனர்.இயற்கை சீற்றங்களால் சாகுபடியிலுள்ள பயிர்கள் பாதித்து, விவசாயிகள் பாதிப்பதை தடுக்கும் வகையிலும், உரிய இழப்பீடு பெறும் வகையிலும், பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மத்திய அரசு, தற்போது பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில், புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.பயிர்க்கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே, பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாவட்ட வாரியாக, பயிர் வாரியான சராசரி மகசூல் அடிப்படையில், காப்பீட்டுத்தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்திற்கு, இத்திட்டத்தில் தற்போது, சிறப்பு பருவம் மற்றும் ராபி பருவத்தில், ( நெல்-2) மக்காச்சோளம், கொண்டைக்கடலை மற்றும் சோளம் ஆகிய பயிர்களுக்கு, காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக, பயிர்க்காப்பீடு செய்துகொள்ளலாம்.கடன் பெறாத விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் காப்பீடு செய்யலாம்.நெல்லுக்கு வரும், 15ம் தேதிக்குள், ஏக்கருக்கு ரூ.573 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். அதே போல், மக்காச்சோளத்திற்கு, - ஏக்கருக்கு ரூ.541 -பிரீமியமாகவும், கொண்டைக்கடலை ஏக்கருக்கு ரூ. 231 பிரீமியமாகவும், வரும், 30ம் தேதிக்குள் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.சோளம் பயிருக்கு. ஏக்கருக்கு ரூ.50 பிரீமியம், வரும் டிச.,16க்குள் காப்பீடு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள் இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்புகளிலிருந்து பாதுகாக்கும் வகையில், சாகுபடி செய்துள்ள பயிர்களை அரசு நிர்ணயத்த காலக்கெடு தேதிக்கு முன்னரே காப்பீடு செய்து பயன் அடையுமாறு, உடுமலை வட்டார வேளாண் துறை சார்பில், கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி