படம் 2சி மற்றும் நெட் படம் நீர் நிலைகள் மீது பொதுமக்களுக்கு அதிகரிக்கும் அக்கறை பொறுப்புணருமா பொதுப்பணித்துறை
திருப்பூர், : குளம், குட்டை, ஆறு, ஓடை உள்ளிட்ட நீர் நிலைகள் மீது மக்களுக்கு அக்கறை அதிகரித்து வரும் அதே நேரம், மாசுபட்டு கிடக்கும் நீர்நிலைகளை மீட்டெடுக்க அரசின் ஒத்துழைப்பு அவசியமானதாக மாறியிருக்கிறது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை, மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி வழிந்தோடி வரும் ஆறுகளும், ஓடைகளுமே பூர்த்தி செய்து வருகின்றன. இதில் திருப்பூர் மாவட்டத்தை மையப்படுத்தி ஓடும் நல்லாறு, நொய்யல் ஆறு, கவுசிகா நதியில் முந்தைய காலங்களை போன்று நன்னீர் வழிந்தோடி செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.சமீபத்தில், நொய்யல் ஆற்று நீரின் தன்மையை, மாசுகட்டுப்பாடு வாரியத்தினர் ஆய்வுக்குட்படுத்திய நிலையில், '1,000 டி.டி.எஸ்., என்ற அளவில் மாசு குறைந்திருக்கிறது' என்றனர். 'இது, கடந்தாண்டுகளில் ஏற்பட்ட மாசு அளவை விட குறைந்ததாக இருக்கலாமே தவிர, நீரின் மாசு என்பது குறையவில்லை' என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.இதுதவிர, அவிநாசி மற்றும் பிற இடங்களில் குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளின் மீதும், அப்பகுதியில் உள்ள மக்கள் கரிசனம் காட்டத் துவங்கியுள்ளனர். 'மழையின் போது, மழைநீரால் அவை நிரம்பி ததும்பும் வகையில், நீர்வழித்தடங்களை சுத்தம் செய்ய வேண்டும்; ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என்ற மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.சுத்திகரிப்பு அவசியம்திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர்பாஷா கூறியதாவது;ஒரு காலத்தில் சுத்தமான நீர் வழிந்தோடிய நொய்யல், நல்லாறு, கவுசிகா ஆற்றுநீர், தற்போது மாசடைந்திருக்கிறது. அவிநாசி பைபாஸ் பாலம் துவங்கி, அணைபுதுார் வழியாக, பூண்டியை கடந்து திருப்பூர் மாநகருக்குள், மாசு கலந்த நீராகவே பயணிக்கிறது. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நஞ்சராயன் குளத்தில் கூட மாசு கலந்த நீர் தான் சங்கமிக்கிறது.வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆறு, ஓடைகளில் கலக்காத வகையில், உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும்; ஆறு, ஓடைக்கரையில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் கினியா வகை புற்களை நடவு செய்து, சுத்திகரித்து வெளியேறும் நீரை அதற்கு பாய்ச்சி வளர்க்கலாம். அந்த புற்களை, கால்நடைகளுக்கு தீவனமாக விற்பனை செய்வதன் வாயிலாக, உள்ளாட்சிகளுக்கு வருமானம் கிடைக்கும். ஆற்றுநீரின் தன்மை, 800 டி.டி.எஸ்.,க்கும் குறைவாக இருக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டால், இதுபோன்ற மறு சுழற்சி பயன்பாடு என்பது சாத்தியமாகும்.இக்கோரிக்கை கடந்த, 7 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் சார்பில், அப்போதைய மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது; அதுதொடர்பான விவாதமும் நடந்தது. ஆனால், பேச்சளவில் நின்று போனது. மீண்டும் இக்கோரிக்கை, தற்போதைய மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
பலம் குறைந்த பொதுப்பணித்துறை
திருப்பூரை மையப்படுத்தி ஆறு, நதி, குளம், குட்டை என ஏராளமான நீர்நிலைகள் உள்ள நிலையில், அவற்றை பராமரிக்கும் பொதுப்பணித் துறையில் தேவைக்கேற்ப அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை என்பது பெரும் குறையாக இருக்கிறது. 'மாநிலம் முழுக்க நீர்நிலைகள், அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, பல முறை சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 'திருப்பூர் மாவட்டத்தில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?' என்பது கேள்விக்குறியே.எனவே, திருப்பூர் மற்றும் ஊரகப்பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டும் தன்னார்வலர்களை ஊக்குவித்து, களப்பணியில் கவனம் செலுத்த பொதுப்பணித்துறையினர் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் மீது அக்கறை உள்ளோரின் எதிர்பார்ப்பு.