உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்று வழியை தேர்ந்தெடுக்கும் முன் நன்றாக யோசிக்க வேண்டும்: அரசு பஸ் டிரைவர்களுக்கு அட்வைஸ்

மாற்று வழியை தேர்ந்தெடுக்கும் முன் நன்றாக யோசிக்க வேண்டும்: அரசு பஸ் டிரைவர்களுக்கு அட்வைஸ்

திருப்பூர்: 'நீர்மட்டம், தண்ணீர் வேகம் குறைவாக இருப்பதாகவும், அவ்வழியாக பஸ்கள் சென்று வருவதாக உள்ளூர் மக்கள், பயணிகளே சொன்னாலும், மாற்று வழியை டிரைவர்கள் தேர்வு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும்,' என, போக்கு வரத்து கழகம், அரசு பஸ் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கி யுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அரசு பஸ்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என, அனைத்து அரசு பஸ் டிரைவர்களுக்கும் போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்து பணிமனைகளிலும் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். பஸ்களில் மழைநீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தொலைதுார பஸ்களை காட்டாறு செல்லும் சாலைகளில் இயக்கும் போது மிகுந்த கவனத்தோடு இயக்க வேண்டும். வானிலை அறிக்கை, அறிவுறுத்தல்களை முறையாக கேட்டறிந்து கடலோர மாவட்டங்களில் பஸ் இயக்க வேண்டும். நீர்மட்டம், தண்ணீர் வேகம் குறைவாக இருப்பதாகவும், அவ்வழியாக பஸ்கள் போய் வருவதாக உள்ளூர் மக்கள், பயணிகளே சொன்னாலும், மாற்று வழியை டிரைவர்கள் தேர்வு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும். பஸ் இயக்கத்தை துவங்கும் முன், முகப்பு விளக்குகள் சரியாக ஒளிர்கிறதா, சாலைகளில் மின்கம்பி, மரங்கள் ஏதேனும் விழுந்துள்ளனவா என்பதை கூர்ந்து கவனித்து பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு, டிரைவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !