அரசு கல்லுாரி மாணவர்கள் மாநில பயிலரங்குக்கு தேர்வு
திருப்பூர்; மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியன இணைந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கி மூன்று நாட்கள் 'சமூக நீதிக்கான இளைஞர்கள்' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடத்துகிறது. இதில் பங்கேற்ற தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைகளில் இருந்து 220 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில், விலங்கியல் துறையை சேர்ந்த நவீன்குமார், ரேவதி; வணிகவியல் துறையை சேர்ந்த திவாகர், லோகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் பயிலரங்கில் கலந்து கொள்கின்றனர். இவர்களை நேற்று கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் வழியனுப்பி வைத்தனர்.