உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய துக்க தினத்தில் அமைச்சர் தலைமையில் அரசு விழா: பொது மக்கள் அதிர்ச்சி

தேசிய துக்க தினத்தில் அமைச்சர் தலைமையில் அரசு விழா: பொது மக்கள் அதிர்ச்சி

உடுமலை; திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில், தேசிய துக்க தினத்திலும், சால்வை, கை தட்டலுடன் அரசு விழாக்களும், துணை முதல்வர் பிறந்த நாள் விழாவும், அமைச்சர் தலைமையில் நடந்ததால், தி.மு.க.,வினரே அதிருப்தியடைந்தனர்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, ஒரு வாரம் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.ஆனால், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம், கடத்துாரில், துக்க தினத்தில் அரசு விழா நடந்தது. வாழை தோரணங்கள் கட்டப்பட்டு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி.,ஈஸ்வரசாமி உள்ளிட்டோருக்கு, கைதட்டல்களுடன், சால்வை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.மேடையில், அமைதியாக விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு, முடிவுற்ற திட்ட பணிகள் துவக்கம், ரேஷன் கடை திறப்பு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா நடந்தது.தொடர்ந்து, கொமரலிங்கம், சங்கராமநல்லுார் பேரூராட்சிகள் மற்றும் ஒன்றிய பகுதிகளில், ரூ.62.98 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள் துவங்கி வைக்கும் விழாவும், ரூ.5.79 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.இதில், அமைச்சர் பேசுகையில், முன்னாள் பிரதமர் மறைவால், அமைதியாக விழா நடப்பதாக தெரிவித்ததோடு, தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினார். முன்னதாக, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி மட்டும் செலுத்தப்பட்டது.உடுமலை நகராட்சி, தாகூர் மாளிகையில், மாலை, 5:00 மணிக்கு, 3 மாதமாக செயல்பட்டு வரும், மாவட்ட அரசு இசைப்பள்ளி துவக்க விழாவும், மாவட்ட அளவில், கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவும், மார்கழி கலை இலக்கிய விழா நடந்தது.காங்., உடன் கூட்டணி அமைத்து, 10 ஆண்டுகள், மன்மோகன்சிங் அமைச்சரவையில் அமைச்சர் பதவிகளை பெற்று, அனுபவித்து வந்த தி.மு.க., அரசு,தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்ட நாளில், அமைச்சர் தலைமையில் விழாக்கள் நடத்தியது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sukumaran Chellakan
டிச 29, 2024 21:14

துக்கம் என்றால் என்னவென்று தெரியாதவர்களாக இருக்கலாம். அல்லது முன்னாள் பிரதமரை பற்றி தெரியாமல் இருக்கலாம்


Raj
டிச 28, 2024 10:22

ஒருவேளை அமைச்சருக்கு மன் மோகன் சிங் இறந்தது தெரிந்திருக்காது....


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 28, 2024 09:29

திமுகவினருக்கு நாட்டைப்பற்றி என்ன அக்கறை? தமிழ் நாட்டைச் சேர்ந்த மேனாள் குடியரசுத்தலைவர் ஆர் வெங்கடராமன் மறைந்த போதும் தமிழக அரசு விடுமுறை அறிவிக்கவில்லை. மாறாக இந்தியா முழுவதும் துக்க தினம் அனுசரித்த போது கலைஞர் மட்டும் முதல்வராக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை