கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம்; எளிமைப்படுத்த எச்.எம்.எஸ்., தீர்மானம்
உடுமலை : கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தின் நடைமுறைகளை எளிதாக்கி விரைவாக மானியம் கிடைக்க செய்ய வேண்டும் என கோவை மண்டல கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் எச்.எம்.எஸ்., சங்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உடுமலையில், கோவை மண்டல கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் எச்.எம்.எஸ்., சங்க அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது. விழாவில், எச்.எம்.எஸ்., சங்க பொது செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார்.தலைமை சங்கத்தின் சங்க செயலாளர் காளிமுத்து வரவேற்றார். அலுவலகத்தை சங்க மாநில செயலாளர் ராஜாமணி திறந்து வைத்தார்; தொழிற்சங்க கொடியை காங்., முன்னாள் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் ஏற்றி வைத்தார். நகர காங்., கமிட்டி தலைவர் ரவி மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.விழாவில், கடந்த, 2023ல் இருந்து தொழிலாளர் நல வாரியத்தின் இணையதள சர்வர் சரிவர செயல்படுவதில்லை. இதனால், கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்கள் விண்ணப்பிக்கவும், உரிய நேரத்தில் உரிய பயன்களை பெற முடியாமல் பாதிக்கின்றனர்.நலவாரிய நிர்வாகத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களின் கடின உழைப்பை ஊக்கப்படுத்தும் வகையில், நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட வேண்டும்.தொழிலாளர் குழந்தைகளின் கல்வி செலவை வாரியம் ஏற்க வேண்டும்.கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை எளிமைப்படுத்தி, விரைவில் மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.காங்., கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், எச்.எம்.எஸ்., மாநில துணை தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் பழனிசாமி நன்றி தெரிவித்தார்.