மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி
25-Nov-2024
உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மானுப்பட்டியிலிருந்து, எலையமுத்துார் செல்லும் ரோட்டோரத்தில் உள்ள பண்ணை குட்டையில், மூன்று சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், சடலங்கள் மீட்கப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அமராவதி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது:குறிச்சிக்கோட்டையை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும், 17 வயது சிறுமிக்கும், சென்னை, வேளச்சேரியை சேர்ந்த குமார் என்பவரின் மகன், தனியார் நிறுவன ஊழியர் ஆகாஷ், 20, என்பவருக்கும், 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்துள்ளனர். அச்சிறுமி தன் உறவினரான, மாரிமுத்து, 20, என்பவரிடம் தன் காதலனை அறிமுகப்படுத்திய நிலையில், அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.கடந்த 18ம் தேதி, சிறுமிக்கு பிறந்த நாள் என்பதால், சென்னையிலிருந்து, குறிச்சிக்கோட்டை வந்த ஆகாஷ், மாரிமுத்து வீட்டில் தங்கியுள்ளார். ஆகாஷ், மாரிமுத்து, சிறுமி ஆகிய மூன்று பேரும், பைக்கில், மானுப்பட்டி - எலையமுத்துார் ரோட்டில் அதிவேகமாக பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக, நிலைதடுமாறி, ரோட்டோரத்திலுள்ள குட்டையில் விழுந்திருக்கலாம். அவர்களை காணவில்லை என, பெற்றோர் தேடி வந்த நிலையில், மூன்று பேரின் சடலமும் குட்டையில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.
25-Nov-2024