பொதுத்தேர்வுக்கு முன்னோட்டம் அரசு பள்ளிகளில் தீவிர பயிற்சி
உடுமலை: பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சிக்கு முன்னோட்டமாக, அரையாண்டுத்தேர்விலும் இலக்கை அடைய அரசு பள்ளிகள் தயாராகி வருகின்றன.உடுமலையில்,35 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வினை மாணவர்கள் எழுதுகின்றனர்.கல்வியாண்டு தோறும், மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தவும், வினாத்தாள் வடிவமைப்பு குறித்து அறிந்து கொள்ளவும், தேர்வு நேரத்தை திட்டமிடவும் அரையாண்டுத்தேர்வு, பொதுத்தேர்வு மாதிரியாக நடத்தப்படுகிறது.இதன்படி, உடுமலை சுற்றுப்பகுதியில் அரையாண்டு தேர்வுக்கும், நுாறு சதவீத தேர்ச்சி இலக்காக நிர்ணயித்து, ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்தி வருகின்றனர்.காலாண்டுத்தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களும் கண்டறியப்பட்டனர். அந்த மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுகிறது.இருப்பினும், தற்போதுள்ள சூழலில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் தொடர்ந்து நடப்பதால், சிறப்பு வகுப்புகள் வாயிலாக, மாணவர்களை அரையாண்டு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:அரையாண்டுத்தேர்வில், எப்போதும் பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்டு, பொதுத்தேர்வு மாதிரியாக நடத்தப்படும். இருப்பினும், கற்றலில் பின்தங்கியுள்ளவர்கள் அரையாண்டுத்தேர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.இந்த மனநிலையை மாற்றி, அவர்களை இத்தேர்விலும் வெற்றி பெறச்செய்வதற்கு தான் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது. பள்ளியில் நுாறு சதவீத தேர்ச்சி நிலை பெற திட்டமிட்டு, அதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.