நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுப்பது அவசியம்
உடுமலை: தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் பாதாளச்சாக்கடை மூடி உடைந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது; இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், அதிக வாகன போக்குவரத்து உள்ளது. குறிப்பாக நகரப்பகுதியில், இந்த ரோட்டில் பல்வேறு பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது. மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படும் இந்த ரோட்டில் நீண்ட காலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. தற்போது ரோட்டின் பல இடங்களில், பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடிகள் உடைந்து, கழிவு நீர் வெளியேறி வருகிறது. இரவு நேரங்களில் அப்பகுதியை கடக்கும் போது இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். கனரக வாகனங்கள் அதிகளவு செல்வதால், பாதாள சாக்கடை மூடி முழுவதுமாக உடையும் அபாயம் உள்ளது. சென்டர்மீடியன் வைக்கப்பட்ட பிறகு மாநில நெடுஞ்சாலை குறுகலாக மாறியுள்ள நிலையில், தற்காலிக ஆக்கிரமிப்பு மற்றும் பாதாள சாக்கடை மூடி உடைப்பு உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்து சிரமமானதாக மாறியுள்ளது. கழிவு நீர் தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. விபத்துகள் ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.