உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாரம்பரிய மண் அகல்விளக்கு தயாரிப்பு சூடு பிடித்தது! கார்த்திகை தீப திருவிழாவுக்கு ஆயத்தம்

பாரம்பரிய மண் அகல்விளக்கு தயாரிப்பு சூடு பிடித்தது! கார்த்திகை தீப திருவிழாவுக்கு ஆயத்தம்

திருப்பூர்: இருள்நீங்கி ஒளி பெருகும் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக, மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது; லட்சக்கணக்கான அகல் விளக்கு தயாராகி வருகிறது. சிவபெருமான், அக்னிவடிவில் காட்சி அருளிய தினம், கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளில், திருவண்ணாமலையில் அதற்காக தீபம் ஏற்றி வைத்து வழிபாடு நடக்கிறது. தீபத்திருவிழாவில், கோவில், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள், கடைகள் என, அனைத்து இடங்களிலும், மூன்று நாட்களுக்கு அகல் விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறது. வீடுகள், ஜொலிக்கும் மண் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது; கோவில்களில், அண்ணாமலை தீபம் ஏற்றி வைக்கப்படுகிறது. கார்த்திகை மாத தீபத்திருவிழாவுக்காக, மண் அகல் விளக்கு தயாரிக்கும் பணி வேகமெடுத்துள்ளது. அன்னுார், குன்னத்துார், கோபி, புளியம்பட்டி, சத்தியமங்கலம் சுற்றுப்பகுதிகளில், அகல் விளக்கு தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது. அகல் விளக்கு தயாரிக்க, வியாபாரிகளிடம் இருந்து மண் வாங்கி இருப்பு வைத்தனர். கனரக வாகனங்கள் செல்லும் ரோட்டில் பரப்பி வைத்தனர். தொடர்ந்து, அவற்றை சேகரித்து, சல்லடை கொண்டு சலித்து, கற்கள் இல்லாத மண் பிரித்து எடுக்கப்பட்டு, பக்குவப்படுத்தி, அகல்விளக்கு செய்யும் பணி நடந்து வருகிறது. ஒரு நாள் வெயிலில் காயவைத்து, இரண்டு நாட்கள் நிழலில் வைக்கப்படுகிறது. மீண்டும் லேசான வெயிலில் காயவைத்து, பிறகு தீயில் சுட்டு தயார் செய்யப்படுகிறது. சுடப்பட்ட அகல் விளக்குகள், 500 மற்றும் 1000 என்ற எண்ணிக்கையில், சிப்பமாக கட்டி வைக்கப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும், வாங்கி செல்கின்றனர். தற்போது, வெளியூரில் இருந்து, அச்சில் தயாரிக்கப்பட்ட மண் விளக்கு விற்பனைக்கு வந்தாலும், கையால் தயாரிக்கப்பட்ட அகல் விளக்கிற்கான வரவேற்பு குறையவில்லை என, உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஒரு லட்சம் அகல்விளக்கு மண்ணை விலைக்கு வாங்கி, இரண்டு மாதம் தயார்படுத்த வேண்டும். அதற்கு பின்னர் தான், புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில், விளக்கு தயாரிக்கும் பணி நடக்கும். ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சம் விளக்குகள் தயாரித்து வருகிறோம். விளக்கு மட்டுமல்ல, மண் குதிரை, பானை, சட்டி போன்ற அனைத்து பொருட்களும் தயாரிக்கிறோம். கோவில் பூச்சாட்டு விழா துவங்கிவிடும் என்பதால், இனிமேல், பூவோடு கும்பம், கும்பம், கம்பத்துக்கான உருளை ஓடுகள் தயாரிப்போம். பண்டிகைக்கு நாள் இருந்தாலும், தற்போதிருந்தே வியாபாரிகள் வாங்கி செல்ல துவங்கிவிட்டனர். - ஆறுமுகம் மண்பாண்டம் தயாரிப்பாளர் குன்னத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ