பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பயனுள்ளதாக மாற்றலாமே! காலியாகும் நகராட்சி பழைய குப்பை கிடங்கு
உடுமலை; உடுமலை நகராட்சி, தாராபுரம் ரோடு பழைய குப்பைக்கிடங்கில், 'பயோமைனிங்' முறையில், கழிவுகள் அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில், உடனடியாகமாற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். உடுமலை தாராபுரம் ரோட்டில், நகராட்சிக்கு சொந்தமான, 6.5 ஏக்கர் பரப்பில், 60ஆண்டுகளாக, பயன்படுத்தியகுப்பை கிடங்கு உள்ளது. இதனைச்சுற்றிலும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர் போராட்டம் காரணமாக, 25 ஆண்டுக்கு முன், கணபதிபாளையத்திற்கு குப்பை கிடங்கு மாற்றப்பட்டு, அங்கும் மூடப்பட்டது. தற்போது நகராட்சியில் சேகரமாகும் குப்பை, கழிவுகள், நுண் உரக்குடில்கள் வாயிலாக உரமாக மாற்றப்படுவதோடு, மக்காத கழிவுகள் மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பழைய குப்பை கிடங்கில் கழிவுகள் அகற்றப்படாமல், பல அடி உயரத்திற்கு தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின், நகராட்சி சார்பில், இங்குள்ள 19 ஆயிரம் டன் கழிவுகள், 'பயோ மைனிங்' முறையில், ரூ.2.13 கோடியில் அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கழிவுகள் நவீன இயந்திரங்கள் வாயிலாக, பிளாஸ்டிக், இரும்பு, மண் என குப்பையில் கலந்துள்ள பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பை அரைக்கப்பட்டு உரமாக மாற்றப்பட்டு, மற்ற பொருட்கள் மாற்று பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பழைய குப்பை காலியாகி வருகிறது. இருப்பினும், நகராட்சி குப்பை கிடங்கிற்கு அருகிலுள்ள, பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், கோவில், நுாலகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில், பெரியகோட்டை ஊராட்சியில் சேகரமாகும், குப்பை, இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. மாற்று திட்டங்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பயன்படுத்தும் வகையிலும், மாற்றுத்திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். இங்கு, செம்மொழி பூங்கா, நடை பயிற்சி மையம், திறந்த வெளி வர்த்தக மையம், பூ மார்க்கெட், வணிக வளாகம் என பல்வேறு திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட், நீளமாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையிலும் உள்ளதால், புற நகர் பகுதிக்கு மாற்ற வேண்டும். தற்போது, நான்கு வழிச்சாலையும் அமைக்கப்படுவதால், புற நகர பஸ்களுக்கான பஸ் ஸ்டாண்டாக மாற்றினால், நகராட்சிக்கு வருவாய் கிடைப்பதோடு, நகரின் நெரிசலும் குறையும். அருகிலேயே, பிரசன்ன விநாயகர், மாரியம்மன் கோவில்களுக்கு சொந்தமான, 36 ஏக்கர் நிலம் உள்ளதால், மாநாட்டு திடல், பெரிய அளவிலான வர்த்தக மையம் அமைக்கலாம். எனவே, பல கோடி ரூபாய் மதிப்பிலான, இந்நிலங்களை முறையாக பயன்படுத்த உரிய திட்டங்களை முன்னெடுக்க, திட்ட கருத்துரு தயாரித்து, அரசுக்கு அனுப்பி நிதி பெற்று பணிகளை துவக்கவேண்டும்.
சோலார் மின் உற்பத்தி பூங்கா
உடுமலை நகராட்சியிலுள்ள, மின் இணைப்புகளுக்கு, ஒவ்வொரு மாதமும், சராசரியாக, 16.50 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாதம், ரூ. 9.50 லட்சம் என, ஆண்டுக்கு, ரூ.1.14 கோடி வரை செலுத்தப்படுகிறது. இதற்கு தீர்வு காண, பழைய குப்பை கிடங்கில், 3.5 ஏக்கர் பரப்பளவில், ஆயிரம் கிலோ வாட் (ஒரு மெகாவாட்) திறனுள்ள, சோலார் மின் உற்பத்தி பூங்கா, 8 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் வாயிலாக, 15.50 லட்சம் யூனிட் உற்பத்தி செய்ய முடியும். இந்தமின்சாரத்தை, மின் வாரியத்திற்கு வழங்கினால், ஆண்டுக்கு1.24 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.