உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாராபுரத்தில் வக்கீல் கொலை; திருப்பூரில் கோர்ட் புறக்கணிப்பு 

தாராபுரத்தில் வக்கீல் கொலை; திருப்பூரில் கோர்ட் புறக்கணிப்பு 

திருப்பூர்; தாராபுரத்தில் வக்கீல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ள ஒரு நிலத்தை அளவீடு செய்யும் பணி தாராபுரம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. கோர்ட் உத்தரவையடுத்து கோர்ட் ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் மூன்று பேர் அப்பணியை மேற்கொண்டனர். நில உரிமையாளர் தரப்பைச் சேர்ந்த சிலர் நிலத்தை அளவீடு செய்ய வந்தோருடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் வக் கீல் முருகானந்தம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இரு வக்கீல்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் நேற்று திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதியில், வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் அவிநாசி கோர்ட் ஆகியவற்றில் வழக்குகளில் ஆஜராகும் வக்கீல்கள் நேற்று கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர். நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறு தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !