கற்றல் திறன் வழி மதிப்பீடு தேர்வு
திருப்பூர் : குறிப்பிட்ட கால இடைவெளியில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அறிய, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (மதிப்பீட்டு புலம்) மூலம், 2021 முதல் கற்றல் திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.நடப்பு கல்வியாண்டில் நான்கு கட்டங்களாக தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. கடந்த, 7ம் தேதி முதல், 10 ம் தேதி வரை முதல் கட்ட தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. 2 ம் கட்ட தேர்வு அக்., 22 முதல், 25ம் தேதி வரையும், மூன்றாம் கட்டம் நவ., 26 முதல், 29ம் தேதி வரையும், 4 ம் கட்ட தேர்வு ஜன., 28 முதல், 31 வரையும் நடக்கவுள்ளது.தேர்வு வினாத்தாள்கள் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் (exam.tnschools.gov.in/) பதிவேற்றப்படும். ஒவ்வொரு தேர்வும், 40 நிமிடங்களில் முடிக்கும் வகையில், 25 கொள்குறி வகை வினாக்களை கொண்டிருக்கும்.மாணவர்களுக்கு தனித்தனியே அச்சடித்த வினாத்தாள் வழங்க வேண்டும். விடைகளை அந்த தாள்களிலே பொறுமையாக மாணவர் குறிப்பிட அறிவுறுத்த வேண்டும். விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, விபரங்களைத் தலைமை ஆசிரியர் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என கல்வித்துறை வாயிலாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.