திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், கிராமப்பகுதிகளை நகரங்களுடன் இணைக்கும் வகையில், 86 புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்கப்படுகிறது. முதல்கட்டமாக நேற்றுமுதல், 18 புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்கம் துவங்கியுள்ளது.போதிய பஸ் வசதி இல்லாததால், பல்வேறு பகுதி கிராம மக்கள், அருகாமையிலுள்ள நகர பகுதிகளுக்கு வந்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பஸ் வசதி இல்லாத கிராம பகுதிகளை, நகர் பகுதிகளுடன் இணைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் புதிய வழித்தடங்களை கண்டறிந்து மினிபஸ் இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வகையில், மாவட்டத்தில், 86 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வழித்தடங்களில் மினிபஸ் இயக்குவதற்கு, தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் நேற்று நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்கத்தை துவக்கிவைத்தார். திருப்பூரில் புது பஸ்ஸ்டாண்டில் விழா நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், கொடியசைத்து புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்கத்தை துவக்கி வைத்தனர். மாவட்டத்தில் முதல்கட்டமாக நேற்று, 18 புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.மினி பஸ் இயக்கத்தை துவக்கிவைத்து அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், கிராமப்பகுதிகளை நகரங்களுடன் இணைக்கும் வகையில், அதிகபட்சம் 25 கி.மீ., துாரம் செல்லும் வகையில், 86 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் முதல்கட்டமாக, 18 வழித்தடங்களில் மினிபஸ் இயக்கம் தற்போது துவக்கிவைக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள வழித்தடங்களில் விரைவில் மினிபஸ் இயக்கம் துவக்கப்படும். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், திருப்பூர் மண்டலத்துக்கு, கடந்த 2021 - 2025 ம் ஆண்டு வரை, மொத்தம் 97 புதிய அரசு பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் உடுமலையில் நடந்த விழாவில், புதிய அரசு பஸ் இயக்கம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள் வெங்கிடசாமி, பாஸ்கர், பழனியப்பன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதிய வழித்தடங்கள்...
மாவட்டம் முழுவதும் முதல்கட்டமாக, 18 புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்கம் நேற்று முதல் துவக்கபட்டுள்ளது. இவற்றில் பயன்பாட்டிலிருந்த 14 வழித்தடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன; மேலும் நான்கு புதிய வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. திருப்பூர் வடக்கில், அவிநாசிலிங்கம் பாளையம் முதல் செம்மாண்டம்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம் வரை, திருப்பூர் தெற்கில், வீரபாண்டி பிரிவு முதல் வலையம்பாளையம் வரை, தாராபுரத்தில் அண்ணா சிலை முதல் பஞ்சம்பட்டி வரை, உடுமலையில், தளி ரோடு சிக்னல் முதல் கால்நடை மருத்துவ கல்லுாரி வரை ஆகிய நான்கு புதிய வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அந்த வழித்தடங்களில் புதிய மினிபஸ் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கில் பத்து, திருப்பூர் தெற்கில் நான்கு என, ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள, 14 வழித்தடங்கள் நீட்டிக்கப்பட்டும், மினிபஸ் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.