உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  புதிய நம்பிக்கை பிறந்தது! அமெரிக்காவின் வரிவிதிப்பு குறைய வாய்ப்பு நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஏற்றுமதியாளர்கள்

 புதிய நம்பிக்கை பிறந்தது! அமெரிக்காவின் வரிவிதிப்பு குறைய வாய்ப்பு நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஏற்றுமதியாளர்கள்

திருப்பூர்: இந்தியாவுக்கான வரிவிதிப்பு குறைக்கப்படும் என, அமெரிக்க அதிபர் கூறியுள்ளது, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஐந்து ஆண்டுகளாக, அபார வளர்ச்சி பெற்றது. அதாவது, ஒரே ஆர்டரில் அதிகபட்ச ஆடைகளை கொள்முதல் செய்வதால், இத்தகைய மொத்த ஆர்டர்களை இந்திய ஏற்றுமதியாளர் பெரிதும் விரும்பி ஏற்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் புதிய அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின், வரிசீர்த்தம் செய்யப்பட்டது அவ்வகையகில், இந்திய ஜவுளி பொருட்களுக்கு, இறக்குமதி வரி மற்றும் 'டேரிப்' 10 சதவீதம் என, 16 சதவீதம் வரிவிதிப்பு இருந்தது. அதில், 10 சதவீத 'டேரிப்', 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து, ஆக., மாதத்தில், இரண்டாம் நிலை வரியாக, 25 சதவீதம் கூடுதலாக விதிக்கப்பட்டது. ஆடை இறக்குமதிக்கான வரியாக, இந்திய ஆடைகளுக்கு, 50 சதவீதம் வரிவிதிக்கப்பட்டது, சீரான வளர்ச்சியில் இருந்து வந்த வர்த்தகத்துக்கு முட்டுக்கட்டையாக மாறியது. அமெரிக்காவுடன் மட்டும் வர்த்தகம் செய்து வந்த திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. சலுகை அறிவிப்பு 'மிஸ்ஸிங்' அமெரிக்காவின் அதிகமான வரி விதிப்பால், அவசரமாக ஆலோசித்து, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் உதவி வழங்க வேண்டுமென ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர். டில்லியில் இருந்து வந்த அரசு பிரதிநிதிகளும் கருத்துக்கேட்டு சென்றனர். இருப்பினும், இதுநாள் வரை எவ்வித சலுகை அறிவிப்பும், மத்திய அரசிடம் இருந்து வெளிவரவில்லை. கடந்த, ஆக. மாதம் துவங்கி, மூன்று மாதங்களாக, அமெரிக்க ஆடை ஏற்றுமதிக்கான உற்பத்தி மந்தமாகிவிட்டது. இந்நிலையில், மத்திய அரசு அமைத்த குழுவினர், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 'விரைவில் அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் உருவாகும்' என்று நம்பிக்கையாக கூறிவந்தனர். இந்நிலையில், அமெரிக்க அதிபரும் 'இந்தியாவுக்கான வரிகள் குறைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளது, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வரி குறைப்பு வந்தால் வசந்தம் திருப்பூரின் மொத்த ஏற்றுமதி, 40 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சியில், அமெரிக்காவின் பங்களிப்பு மிக முக்கியமானது. மொத்த ஏற்றுமதியில், 40 சதவீதம் அளவுக்கு அமெரிக்காவுக்கு செல்கிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு, அந்நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி அதிகரித்தது. புதிய வரிவிதிப்பால், அமெரிக்காவுக்கான வர்த்தகம் முடங்கியுள்ளது; ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டும், சுமூக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், அதிகபட்ச சலுகை வழங்கி வர்த்தகத்தை தொடர்ந்து வருகின்றனர். இருப்பினும், தற்போதைக்கு உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இறக்குமதி வரி, 50 சதவீதம் என்பது ஏற்க முடியாதது. முதல் கட்ட வரி, 25 சதவீதம் விதிக்கப்பட்ட பின்னரும், வங்கதேசம், வியட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகளை காட்டிலும், 5 சதவீதம் வரிவிதிப்பு நமக்கு அதிகம். பரஸ்பர பேச்சுவார்த்தைக்கு பிறகு, சுமூகமான வரிவிதிப்பு இறுதி செய்யப்பட வேண்டு்ம. அமெரிக்க அதிபர்,' வரிகள் குறைக்கப்படும்' என்று கூறியுள்ளது நிம்மதி அளிக்கிறது. இருப்பினும், விரைவாக, வரி குறைப்பு அமலுக்கு வந்தால், வழக்கமான வர்த்தக உறவு மீண்டும் தழைக்கும். - திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை