சின்னவெங்காய விதை உற்பத்தி; விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்
உடுமலை ; உடுமலை, குடிமங்கலம் பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இச்சாகுபடியில், விதை வெங்காயம் மற்றும் நாற்று என இருமுறையில், இரு சீசன்களில் நடவு செய்யப்படுகிறது.நடவு சீசனில், விதை மற்றும் நாற்று விலை பல மடங்கு உயர்வதால், விவசாயிகள் பாதிக்கின்றனர்.இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: விதை உற்பத்திக்காக பராமரிக்கப்படும் சின்ன வெங்காய வயல்களில், கலவன்களை நீக்கி விட வேண்டும். செடிகளின் உயரம், இலை மற்றும் பூங்கொத்துகளின் நிறம் அடிப்படையில், வயல்களில் எளிதாக கலவன்களை கண்டறியலாம்.விதைகள் நன்கு முதிர்ந்த பின், அறுவடை செய்ய வேண்டும். வெங்காயத்தில் விதை அறுவடை தருணத்தில் உள்ளது போல, பூங்கொத்தில், 50 சதவீத கருப்பு விதைகள் வெளியில் தெரியும். அச்சமயத்தில் அறுவடை செய்ய வேண்டும்.விதை உற்பத்தி செய்யும், விவசாயிகள், விதை சான்றளிப்பு பெறலாம். விதையின் இனத்துாய்மை, தரம் குறித்து, சான்றளிப்பு பெறும் போது எளிதாக தெரிந்து கொள்ளலாம்,' இவ்வாறு, தெரிவித்தனர்.