பதவியேற்றதும் பி.டி.ஓ., பிறப்பித்த ஊராட்சி செயலர் மாறுதல் உத்தரவு
பல்லடம்; பல்லடம் ஊராட்சி ஒன்றிய புதிய பி.டி.ஓ., பொறுப்பேற்ற நாளிலேயே ஊராட்சி செயலர் பணியிட மாற்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., கனகராஜ், திருப்பூர் பி.டி.ஓ., வேலுசாமி ஆகியோரை பரஸ் பரம் இடம்மாற்றி, கலெக்டர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டார். முன்னதாக கணபதி பாளையம் ஊராட்சி செயலாளராக இருந்த பிரபுசங்கர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பி.டி.ஓ., கனகராஜ் அவரை பணியிட மாற்றம் செய்து கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தார். வடுகபாளையம் புதுார் ஊராட்சி செயலர் கிருஷ்ணசாமி கணபதிபாளையத்துக்கும், பிரபு சங்கர் வடுகபாளையம் புதுார் ஊராட்சிக்கும் மாற்றப்பட்டனர். கடந்த 23ம் தேதி பி.டி.ஓ., கனகராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, வேலுசாமி பொறுப்பேற்றார். அதே நாளில், கணபதிபாளையம் ஊராட்சிக்கு பிரபுசங்கரையும், வடுகபாளையம்புதுார் ஊராட்சிக்கு கிருஷ்ணசாமியையும் மீண்டும் மாற்றம் செய்து பி.டி.ஓ., வேலுசாமி உத்தரவிட்டார். ''பொறுப்பேற்றதும், இந்த உத்தரவையிட அவசரம் என்ன? ஆளுங்கட்சியை சேர்ந்த சிலரது அழுத்தம் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.