உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருத்து சொல்லப்போகும் கட்சிகள்; காட்சிகள் மாறும் காலம் வருமா? தேர்தல் சிறக்கட்டும்!

கருத்து சொல்லப்போகும் கட்சிகள்; காட்சிகள் மாறும் காலம் வருமா? தேர்தல் சிறக்கட்டும்!

திருப்பூர்; தேர்தலை திறம்பட நடத்துவது தொடர்பான செயல்திட்டங்கள் தொடர்பாக கருத்துகளைப் பெறுவதற்காக, திருப்பூரில் கலெக்டர் தலைமையில், வரும் 20ம் தேதி அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.தேர்தல் கமிஷன், ஒவ்வொரு தேர்தலையும் திறம்பட நடத்துவதற்காக, சிறந்த செயல்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்திவருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தி, முறைகேடுகளை தடுப்பது, நுாறு சதவீத ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. தற்போது, மாநில, மாவட்ட அளவில், அனைத்து அரசியல் கட்சியினருடன் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி, தேர்தல் தொடர்பான கருத்துக்களை பெற தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அவ்விவரங்களை வரும் ஏப்., 30ம் தேதிக்குள் அனுப்பிவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், வரும் 20ம் தேதி, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறார். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்பட மாவட்ட தேர்தல் பிரிவு சார்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம், குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.

சிறந்த ஆலோசனைக்கு செயல்வடிவம்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்று, தேர்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த குறித்த தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுச்சாவடிகளை பிரிப்பதில் தேவைப்படும் மாற்றங்கள், தேர்தல் நடத்தை விதிமுறை, பாதுகாப்பு, ஓட்டுப்பதிவு தொடர்பாக வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என, தேர்தல் தொடர்பான எத்தகைய ஆலோசனைகளையும் கூறலாம். அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும். சிறந்த ஆலோசனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதன்மூலம், வரும் காலங்களில் தேர்தலை மேலும் திறம்பட நடத்த முடியும்.- அதிகாரிகள்.

பணப்பட்டுவாடாவும்

இரட்டை வாக்காளரும்திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, வடக்கு, பல்லடம் உள்ளிட்ட தொகுதிகள் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளாகும். ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது, அதிக சதவீத வாக்குப்பதிவைக் கருத்தில் கொண்டு இத்தொகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், தேர்தலுக்குத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருகிறது. இதற்குக் காரணம், இரட்டை வாக்காளர்கள் அதிகளவில் இருப்பதுதான். சொந்த ஊரில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், இங்குள்ள தொகுதிகளிலும் இடம்பெற்றுள்ளனர். ஆதாருடன் வாக்காளர் பட்டியல் இணைப்பு கட்டாயமாக்கப்படாததால், இவர்களைக் கண்டறிந்து பட்டியலில் இருந்து நீக்குவதிலும் சிக்கல் நிலவுகிறது. தீவிர கவனம் செலுத்தி, அதிகாரிகள் ஆய்வு நடத்துதல், அரசியல் கட்சியினரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடியைக் களையச் செய்ய முடியும்.தேர்தல் காலத்தில், பணப்பட்டுவாடா நடைமுறையை தடுக்க முடிவதில்லை. பண பலத்தால் வென்றுவிடலாம் என்ற நிலை வருவதால், நல்ல வேட்பாளர்கள் கூட வாக்குகளைப் பெற இயலாத நிலை உள்ளது. பணப்பட்டுவாடா நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வாக்காளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !