கூடுதல் ரயில்கள் இயக்கணும் பயணியர் வேண்டுகோள்
உடுமலை : உடுமலை வழியாக சென்னை, தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.உடுமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், வட மாநிலத்தினரும் அதிகமாக பணி புரிகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களையே பயன்படுத்துகின்றனர்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து, தினமும் பலரும் சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு ரயில்களில் பயணம் செய்கின்றனர்.ஆனால், தற்போது இயக்கப்படும் ரயில்கள், இவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால், ரயில்களில் அமர இடமின்றியும், நீண்ட நேரம் நின்று கொண்டும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.ஏற்கனவே, மீட்டர் கேஜ் இருந்த போது, கோவை - ராமேஸ்வரம், கோவை - துாத்துக்குடி, பாலக்காடு - கொல்லம் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அகல ரயில்பாதையாக்கப்பட்ட பின், அந்த ரயில்கள் இயக்கப்படுவதில்லை.எனவே, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.