தனியார் மதுபான பார் அமைக்க கிராம சபையில் மக்கள் எதிர்ப்பு
உடுமலை : உடுமலை குறிச்சிக்கோட்டையில், தனியார் மதுபான 'பார்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்து.உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. இதற்குட்பட்ட குறிச்சிக்கோட்டையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அமராவதி அணை, கேரளா மாநிலம், மறையூர் ,மூணாறு செல்லும் பிரதான வழித்தடமாகவும் உள்ளது.இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. ஏராளமான சுற்றுலா பயணியர் செல்கின்றனர். இந்நிலையில்,இங்கு, மனமகிழ் மன்றம் பெயரில், தனியார் மதுபான பார் அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி, அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில், தனியார் 'பார்' அமைத்தால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பாதிப்பதோடு, விபத்துக்களும் அதிகரிக்கும் என பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மேலும், இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இது வரக்கூடாது என, பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கிராம சபை கூட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வழங்கிய மனு அடிப்படையில், தனியார் 'மது பார்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.