பசுமைக்கு கட்டியம் கூறிய 1,650 சவுக்கு மரக்கன்று நடவு
திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர்-10' திட்டத்தில், சின்னாண்டிபாளையம் அருகே, 1,650 சவுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், பருவ மழை காலத்திலேயே மரக்கன்று நடும் பணியை முடிக்கும் இலக்குடன், பசுமைப்படையினர் விரைந்து கொண்டிருக்கின்றனர்.இத்திட்டத்தில், டிச., மாதத்துக்குள், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வைக்க திட்டமிட்டுள்ளனர்.விவசாயிகள், குறுகிய காலத்தில் அதிக வருவாய் கொடுக்கும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க விரும்புகின்றனர். அதன்படி, உப்பு தண்ணீர் உள்ள பகுதிகளில், சவுக்கு மரக்கன்றுகள் அதிகம் நட்டு வளர்க்கப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சி, சின்னாண்டிபாளையம், செட்டிபாளையம் ரோட்டில் உள்ள தோட்டத்தில், நேற்று சவுக்கு மரக்கன்று நடப்பட்டது. வெங்கடேஷ்வரன், செல்வி ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், 1,650 சவுக்கு மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர்-10' திட்டத்தில், இலவசமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என்று திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.