காய்கறி சாகுபடிக்கு கைகொடுத்த மழை
உடுமலை; வடகிழக்கு பருவமழை கைகொடுத்துள்ளதால், காய்கறி சாகுபடிக்கான நாற்று நடவு உள்ளிட்ட பணிகளை உடுமலை வட்டார விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.உடுமலை வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்தை பயன்படுத்தி, பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்தாண்டு துவக்கத்தில், போதிய மழை இல்லாததால், காய்கறி சாகுபடி பரப்பு குறைந்து, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்தது.தற்போது உடுமலை வட்டாரத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, காய்கறி சாகுபடிக்கான நாற்று நடவு உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, தக்காளி நாற்று நடவு அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.தனியார் பண்ணைகளில் இருந்து நாற்றுகளை வாங்கி விளைநிலங்களில், மேட்டுப்பாத்தி அமைத்து நடவு செய்கின்றனர். தற்போது பெய்து வரும் மழை, செடிகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.நடப்பு சீசனில், சின்னவெங்காய நடவு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதில், நாற்று மற்றும் நேரடி நடவு முறை பின்பற்றப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை சீசனில், காய்கறி உற்பத்திக்கு தகுந்த சீதோஷ்ண நிலை இருக்கும். இந்த சீசனில் வழக்கத்தை விட, கூடுதல் பரப்பில், நடவு செய்ய வாய்ப்புள்ளது.இத்தகைய சீசன்களில், தோட்டக்கலை நாற்று பண்ணை வாயிலாக, நாற்றுகளை வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான உரங்கள் இருப்பு இருப்பதையும், வேளாண், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.