உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வடிய வழியின்றி தாராபுரம் ரோட்டில் தேங்கும் மழை நீர்

வடிய வழியின்றி தாராபுரம் ரோட்டில் தேங்கும் மழை நீர்

உடுமலை: உடுமலை, தாராபுரம் ரோட்டில், மழை நீர் வடிகால் முறையாக கட்டப்படாததால், மழை நீர் வடிய வழியின்றி, ரோட்டில் தேங்குகிறது. உடுமலை, தாராபுரம் ரோட்டில், மழை பெய்ததால், மழை நீர் வடிய வழியில்லாத நிலை உள்ளது. சிறிய அளவில் மழை பெய்தாலும், பல இடங்களில், மழை நீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இயற்கையாக அமைந்திருந்த மழை நீர் வடிகால் ஓடைகள் ஆக்கிரமிப்புகளால் மாயமானது. திருப்பூர் ரோட்டை இணைக்கும் ரோட்டில், பெரிய அளவிலான ஓடை இருந்தது. அதுவும் ஆக்கிரமிப்புகளால் குறுகி, பல இடங்களில் நீர் வழித்தடம் கட்டடங்களாக மாறியுள்ளது. மேலும், கழிவுகள் கொட்டும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், தாராபுரம் ரோட்டில், நடைபாதையுடன் கூடிய, மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. முழுமையாக மழை நீர் வெளியேறும் வகையில், சரியாக திட்டமிடாமல், ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் மட்டும் கட்டப்பட்டதோடு, ரோடு பகுதிகளில் பெய்யும் மழை நீர், வடிகாலில் விழும் வகையில் அமைக்காமல், முற்றிலும் மேல் பகுதி மூடப்பட்டும், பக்கவாட்டு பகுதிகள் அடைக்கப்பட்டும் காணப்படுகிறது. இதனால், மழை நீர் வடிய வழியில்லாமல், ரோட்டிலேயே தேங்கி வருகிறது. அதே போல், பல இடங்களில், பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி, குளம் போல் தேங்கி வருகிறது. எனவே, தாராபுரம் ரோட்டில், மழை நீர் எளிதாக வெளியேறும் வகையில், இரு புறமும் மழை நீர் வடிகால் அமைக்கவும், இயற்கை அமைந்துள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, துார்வாரவும், புதிதாக கட்டப்பட்ட மழை நீர் வடிகால்கள் பயன்படும் வகையில், மழை நீர் சேகரமாக வழிவகை ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை