வடிகால் அமைப்பில் கோளாறு ஆய்வு செய்ய வேண்டுகோள்
திருப்பூர்,; அனுப்பர்பாளையம் பகுதியில் மழை நீர் வடிகால் அமைப்பில் உள்ள பிரச்னை குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என, கவுன்சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திருப்பூர் மாநகராட்சி, 11வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் கலெக்டரிடம் அளித்த மனு விவரம்: மாநகராட்சி 11வது வார்டுக்கு உட்பட்ட வேலம்பாளையம் கிழக்கு பகுதி முதல் அனுப்பர்பாளையம் வரை மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை.சோளிபாளையம் பகுதியிலிருந்து மழை நாளில் வரும் மழை நீர் வெள்ளம் போல் பாய்ந்து வருகிறது. உரிய வகையில் வடிகால் கட்டினால் மட்டுமே தீர்வு ஏற்படும் என வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறைக்கு மனு அனுப்பி, முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பப்பட்டது.இதில், வடிகால் முறையாக அமைக்கப்பட்டுள்ளது என, நெடுஞ்சாலைத் துறை விளக்கம் அளித்துள்ளது.கடந்த வாரம் பெய்த மழையால் ரோட்டில் பெருக்கெடுத்த மழை நீர் ஒரு பனியன் நிறுவன பார்க்கிங் வளாகத்தில் புகுந்து, தேங்கி நிற்கிறது. நெடுஞ்சாலைத் துறையின் பதில் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.கலெக்டர் நேரில் ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.