இ.எஸ்.ஐ., மருத்துவமனை மேம்படுத்த வேண்டுகோள்
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் பின்னலாடை மற்றும் நுாற்பாலை தொழிலாளர்கள் சங்க மாநில இணை செயலர் சுரேஷ்பாபு, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:திருப்பூர், பூலுவப்பட்டி ரிங் ரோட்டில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனை, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பல நோக்கு மருத்துவமனையாக கடந்த, 2024ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால், பொது மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சை மருத்துவம் மட்டுமே அதில், மேற்கொள்ளப்படுகிறது. உயிர் காக்கும் உயர் சிகிச்சை தேவைப்படுவோர், கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். அனைத்து கட்டமைப்பு வசதியும் இருந்தும், மருத்துவ கட்டமைப்பு இல்லை.ஆண்டுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் ஈட்டும் திருப்பூர் நகரில், 10 லட்சம் பேர் பின்னலாடை தொழிலை நம்பியுள்ளனர். எனவே, தொழிலாளர்கள் நலன் கருதி, இ.எஸ்.ஐ., மருத்துவமனையை முழு அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.