போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு; அவிநாசி ரோட்டில் ஆய்வு மும்முரம்
திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிரதான ரோடு, முக்கிய சந்திப்புகளில், ரோடுகள் சந்திக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் பிரதானமாக இருந்து வருகிறது. குறிப்பிட்ட இடங்களில் போலீசார் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டாலும், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடிவதில்லை.இதனால், முக்கிய சந்திப்பு பகுதிகளில் 'ப்ரீ சிக்னல்', ஒரு வழி பாதையாக மாற்றம் செய்வது போன்றவற்றை மாநகர போலீசார் ஆலோசித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், புஷ்பா சந்திப்பு பகுதியில் 'ப்ரீ சிக்னல்' முறை அமல்படுத்தினர். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது, மேலும் சில இடங்களில் போக்குவரத்து மாற்றத்தை மேற்கொள்ள கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், மாநகர போக்குவரத்து போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர். குமார் நகரில் மாற்றம்
இச்சூழலில், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த குமார் நகரில் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் மேற்கொள்ள நேற்று அமல்படுத்தினர். அதில், வளையங்காட்டில் இருந்து குமார் நகருக்கு வரும் வாகனங்களை, தீயணைப்பு துறை அலுவலகம் சிக்னல் அருகே 'யூடர்ன்' போட்டு செல்லும் வகையிலும், அவிநாசி ரோட்டில் இருந்து வளையன்காடு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்பட்டது.அதேபோல், எஸ்.ஏ.பி.,யில் இருந்தும், குமார் நகரில் இருந்து, 60 அடி ரோடுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஒரே வழியாக அனுமதிக்கப்பட்டனர். அங்கேரிபாளையம் ரோட்டை ஒரு வழிபாதையாகவும் மாற்றியுள்ளனர். இந்த இடங்களில் போக்குவரத்து மீறில் வாகனங்கள் ஈடுபடாமல், அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பேனர் வைக்கப்பட்டும் மற்றும் பணியில் போலீசார் இருந்தனர்.மேலும், விநாயகர் கோவில் முன்பு இருந்த பஸ் ஸ்டாப்பை சில அடி துாரம் தள்ளி மாற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பஸ்கள் நின்று பயணிகளை இறக்கி மற்றும் ஏற்றி செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சோதனை முயற்சி
போலீசார் கூறியதாவது:வாகனங்கள் சீராக செல்லவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கமிஷனர் பல்வேறு நடவடிக்கையை ஆலோசித்து வருகின்றார். முதல்கட்டமாக குமார் நகர் மற்றும் பல்லடம் ரோட்டில் சந்தைபேட்டை ஆகிய இடத்தில் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுபோன்று, 'ப்ரீ சிக்னல்'யும் சில இடத்தில் அமல்படுத்த ஆலோசனை நடக்கிறது. தொடர்ந்து, ஒவ்வொரு சந்திப்பு, பிரதான ரோடுகள் பார்வையிடப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார். ஓய்வு பெற்ற அதிகாரி ஆய்வு
மாநகரில் போக்குவரத்து வளர்ச்சிக்கு ஏற்ப, தகுந்த உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. பெருகிவிட்ட வாகன எண்ணிக்கையால், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாமல் இருக்கிறது. தற்போது உள்ள மாநகர பகுதியில் என்னென்ன விஷயங்களை மாற்றம் செய்ய மாநகர போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.போக்குவரத்து விஷயங்களில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து ஆய்வு செய்ய, திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி அழைப்பின் பேரில், ஓய்வு பெற்ற துணை கமிஷனர் சுரேந்தர், இரு நாட்களாக மாநகரம் முழுவதும் ஒவ்வொரு சந்திப்பு, ரோடு என, அனைத்தையும் ஆய்வு செய்து போக்குவரத்து மாற்றம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, கமிஷனருக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.