ரூ.1.10 கோடி பறிப்பு வழக்கு; இருவரை பிடிக்க தீவிரம்
திருப்பூர்; கரூர், கீழநஞ்சையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 60; நகை வியாபாரி. கடந்த, 4ம் தேதி மாலை கோவையில் நகை வாங்க கரூரில் இருந்து காரில் கிளம்பிய வெங்கடேஷ் மற்றும் கார் டிரைவர் ஜோதிவேல், 54 ஆகியோர் சென்றனர்.அப்போது, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சம்பந்தம்பாளையத்தில் பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று திடீரென வழிமறித்தது. காரில் இறங்கிய, நான்கு பேர் தங்களை போலீஸ் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டு, கஞ்சா கடத்தப்படுவதாக காரை சோதனை செய்தனர்.தொடர்ந்து, இருவரையும் தாக்கி, மிரட்டி ஒரு கோடியே, 10 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல் போன்களை பறித்து சென்றனர். புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் விசாரித்தனர்.பணம் பறிப்பில் கார் டிரைவர் ஜோதிவேலுக்கு தொடர்பு இருப்பது குறித்து போலீசாருக்கு தெரிந்தது. ஜோதிவேல், அவரது நண்பர் தியாகராஜன், 41, ஜாகீர் உசேன், 25, தினேஷ், 44 மற்றும் பிளஸ்2 மாணவர் உட்பட, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். இதுவரை, 96.53 லட்சம் ரூபாய், மூன்று மொபைல் போன், காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.இச்சூழலில், பணம் பறிப்பில் மூளையாக செயல்பட்ட அலாவுதீன் உட்பட, இருவரை தனிப்படை போலீசார் சென்னை, மதுரை, விருத்தாச்சலம், கரூர் என, பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக தேடி அலைந்து வருகின்றனர்.தற்போது வரை, இருவரும் சிக்காமல் தாங்கள் இருக்கும் இடங்களை அடுத்தடுத்து மாற்றி தப்பி வருகின்றனர்.தொடர்ந்து, இருவரையும் பிடிக்க தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளனர்.