குளங்களை காப்பாற்றுங்க; விவசாயிகள் வலியுறுத்தல்
குளங்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். ஆண்டுதோறும் குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அரசு அனுமதி கொடுக்கிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை உண்மையான விவசாயிகள் வண்டல் மண் எடுப்பது அரிதாக உள்ளது. ஏனெனில் வண்டல் மண்ணே கிடைப்பதில்லை. வண்டல் மண் என்ற போர்வையில் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்வது மட்டுமே நடக்கிறது. ''உப்பாறு, கத்தாங்கண்ணி, பாரத்தொழுவு உள்ளிட்ட ஒரு சில குளங்களில் மட்டும் குறைந்த அளவே வண்டல் மண் உள்ளது; மாவட்டத்தில் உள்ள, 95 சதவீத குளங்களில் வண்டல் மண்ணே கிடையாது'' என்கின்றனர் விவசாயிகள். மாவட்டம் முழுவதும் நில மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதால் மண் விலையும் உயர்ந்துள்ளது. கிராவல் மண்ணுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மண் மாபியாக்களின் முக்கிய இலக்காக கோவில் நிலங்கள், பஞ்சமி நிலம், குளம் போன்றவையே உள்ளன. 'துார்வாருகிறேன்' என்ற போர்வையில் குளங்கள் இன்று பாதாளம் வரை வெட்டி எடுக்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் குளங்களே இருக்காது. வெறும் பாறைக்குழிகளாகவே இருக்கும். தற்போது நிலத்தடி நீர்மட்டம் சரிந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நீர்நிலைகள் அழிக்கப்பட்டால் அதன் பின்விளைவுகள் கொடூரமானதாக இருக்கும். எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும். குளங்களைக் காப்பாற்ற அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள். - நமது நிருபர் -