சுற்றுச்சூழல் மாசுபடுத்திய கடைக்காரருக்கு அபராதம்
அவிநாசி: அவிநாசி, கரிவரதராஜ பெருமாள் கோவில் அருகில் உள்ள கடைகளின் பின்புறம் நேற்று காலை திடீரென கரும்புகை வந்தது. இதனால், பொதுமக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு கடும் புகை மூட்டமாகவும், காற்றில் எண்ணெய் பசை கொண்ட வாசனை அதிக அளவில் வீச துவங்கியது. இதனால் பலருக்கு இருமல் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள், நகராட்சி அலுவலகத்தில் தகவல் அளித்தனர். உடனே நகராட்சி சுகாதார ஆய்வாளர் அரவிந்த், கண்காணிப்பாளர் கோமதி ஆகியோர் புகை வந்த திருமுருகன் ஆட்டோ கன்சல்டிங் என்ற கடையின் பின்புறம் ஆய்வு செய்தனர். அதில் டூ வீலர் மெக்கானிக் ஷாப்பில் பயன்படுத்திய டூவீலர்கள் விற்பனை நிலையத்தின் பின்புறம், கிரீஸ் துணிகள், டூவீலரில் இருந்த ஒயர்கள், பிளாஸ்டிக் ஆகியவற்றை போட்டு தீ வைத்தது தெரிய வந்தது. சுற்றுச்சூழலையும், காற்றையும் மாசுபடுத்தும் வகையில், செயல்பட்ட கடை உரிமையாளருக்கு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.