திருப்பூர்;மீட்டர் தட்டுப்பாடு காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில், புதிய மின் இணைப்பு மற்றும் பழுதான மின் மீட்டர் மாற்றும் பணி முடங்கியுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பழைய மின் மீட்டருக்கு பதிலாக, டிஜிட்டல் மீட்டர் மாற்றப்பட்டது. இணையதளம் மூலமாக கணக்கீடு செய்து, கட்டணத்தை நிர்ணயிக்க வசதியாக, 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது; அதற்கான ஆயத்த பணி துவங்கியுள்ளது.'ஸ்மார்ட்' மின் மீட்டர் பொருத்தும் பணி நடக்க இருப்பதால், 'டிஜிட்டல்' மீட்டர் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும், ஒருமுனை மின் இணைப்பு வழங்க மீட்டர் இல்லாமல், பணிகள் முடங்கியுள்ளன. வீடுகளில் பழுதான மின் மீட்டர்களை மாற்றி, புதிய மீட்டர் பொருத்தும் பணியும் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.'சிங்கிள் பேஸ்' எனப்படும், ஒரு முனை மின்சார இணைப்புக்கு விண்ணப்பித்தால், ஓரிரு நாளில், மீட்டர் பொருத்தி, புதிய இணைப்பு வழங்கப்படும்; கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, மாநிலம் முழுவதும் பணிகள் முடங்கியுள்ளது.கைவசம் இல்லாததால், மின் மீட்டர் பழுதான மின்நுகர்வோருக்கு, உடனுக்குடன் புதிய மீட்டர் பொருத்த இயலவில்லை. மின் கட்டணத்தை கணக்கிட முடியாமல், கடந்த ஓராண்டில் செலுத்திய, அதிகபட்ச கட்டணத்தை செலுத்த வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், மின் மீட்டர் தட்டுப்பாடால், மின் இணைப்பு வழங்கும் பணியும், பழுதான மீட்டர் மாற்றும் பணியும், கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில் மீட்டரை தருவிக்க வேண்டுமென, பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.இதுகுறித்து திருப்பூர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சுமதி கூறுகையில், ''ஸ்மார்ட்' மீட்டர் விரைவில் வந்துவிடும் என, 'டிஜிட்டல்' மீட்டர் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.மாநில அளவில், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், புதிய 'டிஜிட்டல்' மீட்டர் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது; இம்மாத இறுதிக்குள் வந்துவிடும்,'' என்றார்.