தாயை அடித்துக்கொன்ற மகன் கொலையை மறைக்க முயற்சி
உடுமலை : உடுமலை அருகே தாயை அடித்துக்கொன்ற மகனை தளி போலீசார் கைது செய்தனர். சம்பவத்தை மறைக்க அந்நபர் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து, 51; மனைவி பிரிந்து சென்ற நிலையில், தாய் வள்ளியம்மாள் அவருடன் வசித்து வந்துள்ளார்.கடந்த 16ம் தேதி பேத்தி வீட்டுக்கு சென்றிருந்த வள்ளியம்மாளை, செல்லமுத்து தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். சிறிது நேரத்தில், தாய் இறந்து விட்டதாக, தெரிவித்து விட்டு, இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார்.இந்நிலையில், வள்ளியம்மாளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மகள் கலைச்செல்வி, 45, தளி போலீசில் புகார் தெரிவித்ததால், உடல், உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அதில், பலத்த காயங்களால், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.இதையடுத்து, நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், தாய் வள்ளியம்மாளை அழைத்துச்சென்ற, மகன் செல்லமுத்து, 'அடிக்கடி ஏன் உறவினர்கள் வீட்டுக்கு செல்கிறாய்,' என தாயை கழுத்தை நெறித்தும், மார்பிலும் அடித்துள்ளார்.அந்த காயத்தின் தன்மையால், வள்ளியம்மாள் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்லமுத்துவை தளி போலீசார் நேற்று கைது செய்தனர். தாயைத்தாக்கி கொன்று விட்டு, இயற்கை மரணம் என இறுதி சடங்கு செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.