திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், தெரு நாய்கள் கடித்து பலியான ஆடுகளுக்கு, இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யுமாறு, கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. '6 மாதத்தில், 195 ஆடுகள், நாய்கள் கடித்து பலியாகியுள்ளன' என, கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், மூலனுார், குண்டடம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட இடங்களில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, தெரு நாய்கள் கடித்து, ஆடுகள் பலியாவது தொடர் கதையாக இருந்து வருகிறது. தினம் தினம் அரங்கேறி வரும் இச்சம்பவம், கால்நடை வளர்ப்போர் மத்தியில் கடும் அதிருப்தி, விரக்தியை ஏற்படுத்தியிருக்கிறது.தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்; இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். கடந்த, ஏப்., முதல் அக்., வரை, நாய்கள் கடித்ததால் பலியான ஆடுகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, 'ஆடுகள் இறப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது' என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, 'அரசிடம் இருந்து இழப்பீடு தொகை பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டும்' என, திருப்பூர், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.ஓ...நாயும்ஆட்டுக்குட்டியும்!---------------கடந்த, ஏப்., முதல்அக்., மாதம் வரைநாய்கள் கடித்து குதறியதில்பலியான ஆடுகள்(ஒவ்வொரு பகுதி வாரியாக)மூலனுார் - 34குண்டடம் - 9வெள்ளகோவில் - 43காங்கயம் - 75தாராபுரம் - 13உடுமலை - 21மொத்தம், 195 ஆடுகள்
கோர்ட் படியேற தயார்!
ஆடுகள் பலியாகும் விவகாரம் தொடர்பாக, விவசாய அமைப்பினர் நீதிமன்றத்தின் வாயிலாக நியாயம் கேட்கவும் முடிவெடுத்துள்ளனர். 'நாய்கள் கடித்து பலியான ஆடுகளுக்கு, அந்தந்த ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களின் நிதி ஆதாரத்தில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை, 20க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளன. இந்த தீர்மான நகல் மற்றும் ஆடுகள் இறப்புக்கான பிரேத பரிசோதனை அறிக்கையை இணைத்து, நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்வதற்கான முயற்சியில், விவசாய அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.