உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தியாகிகள் பெயருடன் கல்வெட்டு காட்சிப்பொருள் ஆனது

தியாகிகள் பெயருடன் கல்வெட்டு காட்சிப்பொருள் ஆனது

திருப்பூர்; கடந்த, 3 ஆண்டுக்கு முன், திருப்பூர் மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட, திருப்பூர் தியாகிகள் பெயர் பொறித்த கல்வெட்டு பதிக்கப்படாமல், மாநகராட்சி அலுவலகத்தில், வீணாக வைக்கப்பட்டிருக்கிறது.'சுதந்திர தின அமுது பெருவிழா' நாடு முழுக்க கொண்டாடப்பட்டபோது, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில், சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்; பெருமைப்படுத்தப்பட்டனர். திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடந்த விழாவிலும், சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு, சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவு கேடயமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனிடம், 'திருப்பூரில் தியாகிகள் நினைவிடம் அமைத்து, விடுதலை போரில் பங்கேற்ற திருப்பூர் தியாகிகளின் பெயர் பொறித்த கல்வெட்டு தயாரித்து, அங்கே வைக்க வேண்டும்,' என்ற கோரிக்கையை, சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி நிர்வாகிகள் முன்வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி நிர்வாகம் தியாகிகளின் பெயர் பொறித்த கல்வெட்டையும் தயாரித்தது. ஆனால், நினைவிடமும் அமைக்கவில்லை; கல்வெட்டும் பதிக்கப்படவில்லை. கடந்த, 3 ஆண்டாக மாநகராட்சி வளாகத்தில் திரையால் மூடப்பட்டு கிடக்கிறது. -- திருப்பூர் மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்ட தியாகிகள் பெயர் அடங்கிய கல்வெட்டுகள். கல்வெட்டுகள் பதிக்கப்படாமல் மாநகராட்சி அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குமரன் நினைவிடத்தில் நிறுவலாம் திருப்பூரில் தியாகிகள் நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சுதந்திர அமுது பெருவிழாவின் போது, மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட தியாகிகள் பெயர் பொறித்த கல்வெட்டு இதுவரை எங்கும் பதிக்கப்படவில்லை. திருப்பூர் குமரன் நினைவிடத்திலாவது நிறுவினால் சிறப்பாக இருக்கும். இதுவரை பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. - நடராஜன், மாநில பொதுச்செயலாளர், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை