வாக்காளர் பட்டியல் செம்மை இல்லை... கொடுமை!
''நுாறு சதவீதம் செம்மைப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்'' என்று அதிகாரிகள் சொல்லலாம்; அப்படியே நம்புவதற்கு வாக்காளர்கள் தயாராக இல்லை.ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்; திருப்பூர், கருவம்பாளையத்தில், 40 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்து வரும், 80 வாக்காளர்கள், அருகருகே உள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர். இதை ஆதாரபூர்வ ஆவணமாக தயாரித்து, தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியிருக்கிறார், அப்பகுதி குடியிருப்புவாசியும், முன்னாள் நகர காங்., தலைவருமான சுந்தர்ராஜன்.மேற்கு பிள்ளையார் கோவில், முதல் மற்றும் இரண்டாவது வீதியில் வசிக்கும் வாக்காளர்கள், அதுவும், ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், ஒரே பாகத்தில் இடம் பெறாமல், 8 பாகங்களில், வெவ்வேறு ஓட்டுச் சாவடிகளில் சிதறியுள்ளனர். 'கருவம்பாளையம் எக்ஸ்டன்சன் முதல் வீதி' மற்றும் 'கருவம்பாளையம் பிரிவு முதல் வீதி' என, ஒரே தெரு, இரு பிரிவுகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.பாகம், 89 பிரிவு எண் 1ல், 'கருவம்பாளையம் பள்ளி வீதி' எனவும், பிரிவு எண், 4ல், 'ஆரம்பப்பள்ளி வீதி' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால், இரண்டும் ஒரே வீதி தான். இரு பிரிவுகளிலும், 382 வாக்காளர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால், 101 வாக்காளர்களே உள்ளனர். பாகம் எண்: 105, பிரிவு எண்: 3ல், 'பாலாஜி நகர் முதல் வீதி, வார்டு எண். 52' என பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள வாக்காளர்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையில், 'கே.வி.ஆர்., நகர் கிழக்கு வீதி, வார்டு எண். 42' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தெருவின் பெயரே வாக்காளர் பட்டியலில் மாற்றப்பட்டிருக்கிறது. சக்தி அபார்ட்மென்டில் வசிப்பவர்கள், 7 வார்டுகளில் பிரிக்கப்பட்டுள்ளனர். இப்படி ஒரு சிறிய வார்டுக்குள்ளேயே ஏகப்பட்ட குழப்பம், குளறுபடிகளை தாங்கிய படி தான் வாக்காளர் பட்டியல் 'அப்டேட்' செய்யப்பட்டிருக்கிறது.-----
களப்பணி இல்லை
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள மனு:வாக்காளர் பட்டியலில் ஒரே முகவரியில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களை பிரிவினை செய்து, வெவ்வேறு தெரு, பாகங்களில் பதிவு செய்வது, தெருக்களை மாற்றி பதிவு செய்வது, வீட்டு எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இருப்பது என்பது போன்ற பல குளறுபடிகள் தென்படுகின்றன. சரியான விவரங்களை சேகரித்து தருவதற்காக தான் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களது பணிகளை கண்காணிக்க, மேற்பார்வை செய்ய அதிகாரிகள் இருப்பினும், தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கும் செம்மையான வாக்காளர் பட்டியலை தயார் செய்ய முடியவில்லை. ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கினால் அவர்கள் களப்பணி வாயிலாக சரியான விவரங்களை சேகரிக்க முடியும்.வெளி மாவட்டங்களில் இருந்து வேலை நிமித்தமாக குடியேறும் பலரும், தங்கள் சொந்த ஊரிலும், வசிக்கும் ஊரிலும் உள்ள வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவு வைத்துள்ளனர்; இறந்து போன பலர், பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில், 1.96 லட்சம் வாக்காளர்கள் இரட்டை பதிவில் உள்ளதாக கண்டறியப்பட்டு, அவர்கள் தங்கள் பெயரை நீக்கிக் கொள்ள பதிவு தபால் அனுப்பி வருகின்றனர். அந்த பதிவு தபால்கள் தவறான முகவரிக்கு செல்கிறது. இவ்வாறு, பல்வேறு குழப்பம், வாக்காளர் பட்டியலில் தென்படுகிறது. இதை செம்மைப்படுத்த முனைப்புக் காட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -