உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவரில்லை; அணை அருகில் பாதுகாப்பில்லை

அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவரில்லை; அணை அருகில் பாதுகாப்பில்லை

உடுமலை; திருமூர்த்திமலை துவக்கப்பள்ளி கட்டடத்துக்கு, சுற்றுச்சுவர் அமைத்து மாணவர்கள் பாதுகாப்பை ஒன்றிய நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். உடுமலை அருகே திருமூர்த்திமலை, மலைவாழ் மக்கள் குடியிருப்பில், 114 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அக்குடியிருப்பு குழந்தைகளின் கல்விக்கு ஆதாரமாக, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. திருமூர்த்தி அணை எதிரில், ரோட்டையொட்டி இந்த பள்ளி அமைந்துள்ளது. ஒரே கட்டடம் மட்டுமே பள்ளிக்கு உள்ளது. நீண்ட இழுபறிக்கு பின், சமீபத்தில் இந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், சுற்றுச்சுவர் இல்லாததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அங்கு வரும் சுற்றுலா பயணியர், பள்ளிக்கு அருகில் மீதமாகும் உணவுப்பொருட்களை வீசிச்செல்கின்றனர். இதனால், இரவு நேரங்களில் அப்பகுதியில் வலம் வரும் வனவிலங்குகளால், சேதம் ஏற்படுகிறது. பகலிலும், பள்ளிக்கு வெளியே விளையாடும், மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. உடுமலை ஒன்றிய நிர்வாகம், மாணவர்கள் பாதுகாப்புக்காக, திருமூர்த்திமலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். இதர கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !