தினமலர் - பட்டம் வினாடி - வினா போட்டி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மாணவர்கள் டக் டக் பதில்
உடுமலை: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்புக்கான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற மெகா வினாடி - வினா போட்டி, கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ்மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, பட்டம் இதழ் நாள்தோறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.இதை வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களின் கற்றல் சார்ந்த தேடலை மேம்படுத்தும் வகையில், கடந்த 2018 முதல் 'மெகா வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.நடப்பாண்டுக்கான வினாடி - வினா போட்டி, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ- ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சி உள்ளது.நேற்று பள்ளியில் நடந்த இப்போட்டியில், முதல் சுற்றில், 71 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக புள்ளிகள் பெற்ற, 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரித்து இறுதிச்சுற்று போட்டி நடந்தது.மூன்று கட்டங்களாக நடந்த போட்டியில், முதல் பரிசை 'பி' அணியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவியர் பிரியவர்ஷினி, பிரியங்கா ஆகியோர் வென்றனர்.போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பள்ளி முதல்வர் சாரதாமணிதேவி, பள்ளி துணை முதல்வர் மகாலட்சுமி, பட்டம் ஒருங்கிணைப்பாளர் சந்தியா, ஆசிரியர் பாரதிபிரியதர்ஷினி பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள், இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதி போட்டி நடத்தப்படும். மாணவர்களின் பொக்கிஷம்
பள்ளி முதல்வர் சாரதாமணிதேவி கூறியதாவது:தமிழ்மொழியை மாணவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில், பட்டத்தின் பகுதிகள் உள்ளன. முக்கிய நிகழ்வுகளை கதை வாயிலாக, மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறது.பருவ நிலை, சுற்றுச்சூழல் மாற்றம், சைபர் குற்றங்கள் குறித்து, நிகழ்கால எடுத்துக்காட்டுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாட்டு நடப்புகளை அறிந்துகொள்வதற்கான இதழாக உள்ளது.அறிவியல், சமூக அறிவியல், தமிழ், ஆங்கிலம், கணிதம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொக்கிஷமாக, மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.இவ்வாறு கூறினார். ஆர்வத்தை துாண்டுகிறது
மாணவி பிரியவர்ஷினி: ஒவ்வொரு முறையும் பட்டம் இதழ் வாசிக்கும்போது, ஆர்வம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. பல அறிய தகவல்களை, எளிமையாக அறிந்துகொள்வதற்கான ஒரு இதழாக உள்ளது.பட்டம் வாசிப்பதால், தற்போது நுாலக புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் ஏற்படுகிறது. அதில் வரும் தகவல்களை பெற்றோருடன் பகிர்ந்துகொள்வதால், அவர்களுக்கும் பட்டம் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆற்றலை மேம்படுத்துகிறது
மாணவி பிரியங்கா: பட்டம் இதழில் வழங்கப்படும் தகவல்கள் எங்களின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் உள்ளது.அதில் வழங்கப்படும் தகவல்கள் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கு ஆர்வத்தை துாண்டுகிறது. இதனால் படிப்பிலும், திறம்பட செயல்பட முடிகிறது. வினாடி -வினா போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று பரிசையும் பெறுவோம்.