உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாநகராட்சி குப்பை பிரச்னை

திருப்பூர் மாநகராட்சி குப்பை பிரச்னை

பல்லடம்; திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகளை கொட்டும் பிரச்னையால், பல்லடம் அருகே, இச்சிப்பட்டி கிராமம் கலவர பூமியாக மாறியது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி மற்றும் 63 அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில், திருப்பூர் மாநகராட்சி குப்பைகள் கொட்ட வந்த வாகனங்களை, அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை மீண்டும் இச்சிப்பட்டி பாறைக்குழியில் குப்பைகளை கொட்ட லாரிகள் அணிவகுத்து வந்தன. நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, திருஞானம் என்பவரின் சட்டையை கிழித்த போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், சுப்பாத்தாள், 55 என்பவரின் கால் முறிந்தது. ஜோதிமணி, 32 என்பவர், கையில் வைத்திருந்த சாணி பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்து தற்கொலைக்கு முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். கால் முறிவு ஏற்பட்ட பெண், ஆம்புலன்ஸில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விவசாய சங்க நிர்வாகிகள் பலரும் சம்பவ இடத்துக்கு வந்து கடும் கண்டனம் தெரிவித்தனர். பொதுமக்கள் கூறியதாவது: கொட்டிய குப்பைகளை நான்கு நாட்களுக்குள் திருப்பி எடுத்து விடுவோம் என்று மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் உறுதி அளித்துச் சென்றார். இன்று, போலீசாரை திரட்டி வந்து எங்களை மிரட்டி அடிபணிய வைக்கின்றனர். இவ்வளவுபேர் எதிர்ப்பு தெரிவித்தும் இங்கு குப்பை கொட்டுவதற்கு கலெக்டர் அனுமதி அளித்தது ஏன்? ஒருபோதும் இங்கு குப்பைகள் கொட்ட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபலதா ஆகியோரை சுற்றி வளைத்து பெண்கள், பொதுமக்கள், கடுமையாக வாக்குவாதம் செய்தனர். இதனால், குப்பை லாரிகள் அங்கிருந்து கிளம்பின. அதன்பின், விவசாயிகள் பெத்தாமூச்சிபாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த தாசில்தார் சபரி, பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில், புதிய இடத்தில் குப்பை கொட்டப்படாது என, உறுதி அளித்ததை ஏற்று மறியல் கைவிடப்பட்டது. இந்த பிரச்னையால், இச்சிப்பட்டி கிராமம் நேற்று கலவர பூமியாக காட்சியளித்தது.

விமானப்படையினரும் எதிர்ப்பு

இச்சிப்பட்டியில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் சூலுார் விமானப் படைத்தளம் உள்ளது. இச்சிப்பட்டியில் குப்பை கொட்டப்பட்டால், பறவைகள் வட்டமிட வாய்ப்பு உள்ளது. இதனால், விமா னங்கள் 'டேக் ஆப்' மற்றும் தரையிறங்கும் போதும் விபத்து அபாயம் உள்ளது. எனவே, குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, விமானப்படை அதி காரிகளும் சம்பவ இடத்துக்கு வந்திருந்தனர். அவர் களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !