மேலும் செய்திகள்
கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
31-Oct-2025
உடுமலை: 'உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், சரக்குகளை கையாளும், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்,' என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வேதனையில் உள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில், நுாற்பாலைகள், காகித ஆலை, தீவன உற்பத்தி நிறுவனங்கள், தென்னை நார் உற்பத்தி நிறுவனங்கள் என, தொழில் நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. மேலும், காற்றாலை, பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழில்களும், அதிகரித்து வருகின்றன. பிரதானமாக விவசாயத்தொழில் உள்ளது. தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளான பருத்தி, மக்காச்சோளம் மற்றும் இதர சரக்குகள் பிற மாநிலங்களில் இருந்து, லாரிகள் உட்பட சரக்கு வாகனங்கள் வாயிலாகவே தருவிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சி மிகுந்த இப்பகுதியில், பிற பகுதிகளில் இருந்து, ரயில்வே வாயிலாக, சரக்குகளை பெறவும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனைக்கு அனுப்பவும், பல தொழில்நிறுவனங்கள், சிறு, குறு தொழில் முனைவோர் தயாராக உள்ளனர். திண்டுக்கல்-பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள், 2009ல் துவங்கி, 2015ல், நிறைவு பெற்றது. அதன்பின்னர், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், சரக்குகளை கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. பார்சல் சர்வீஸ் சேவையும் நிறுத்தப்பட்டது. இந்த சேவைகளை மீண்டும் துவக்குவதால், ரயில்வேக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்; தொழில்துறையினரும் பயன்பெறுவார்கள் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலந்தாய்வு கூட்டம் இந்நிலையில், தெற்கு ரயில்வே சார்பில், சரக்கு வர்த்தகத்தை அதிகரிக்க, வர்த்தக மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில், கருத்து கேட்பு, கலந்தாய்வு கூட்டம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்டது. அப்போது, ரயில்வே அதிகாரிகளை உள்ளடக்கிய, வர்த்தக மேம்பாட்டு குழுவினரை, உடுமலை வியாபாரிகள் சங்கம், உர வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சில தொழில்துறையினர் சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதன்படி, விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதிக்கு, பிற மாநிலங்களில், இருந்து லாரிகள் மூலமாகவே, உரங்கள் கொண்டு வரப்படுகின்றன. சீசன் சமயங்களில், குறித்த நேரத்துக்கு, உரங்களை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதே போல், நுாற்பாலை, காகித ஆலை நிர்வாகத்தினரும், பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், விரைவில், சரக்குகளை கையாளும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; உடுமலை பகுதியிலுள்ள, முக்கிய கோழி தீவன உற்பத்தி நிறுவனத்தினர், மக்காச்சோளம், சோயா ஆகிய மூலப்பொருட்களை, உடுமலை ரயில்வே ஸ்டேஷன் மூலம், கையாள தயாராக உள்ளது குறித்தும், அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட, ரயில்வே அதிகாரிகள் குழுவினர், விரைவில், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், சரக்குகளை கையாளும் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். விவசாயிகள் தேவைக்காக, காய்கறிகள், விவசாய விளைபொருட்களை அனுப்ப, 50 சதவீத கட்டண சலுகை உள்ளது. விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், குளிரூட்டப்பட்ட ரயில்பெட்டிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தனர். பல ஆண்டுகளாகியும் இத்திட்டம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தொழில்முனைவோர், வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஏமாற்றமடைந்துள்ளனர். விரைவில் மீண்டும் கலந்தாய்வு கூட்டம் நடத்தி, தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பார்ம்களில் மேற்கூரை வசதி இல்லாமல் உள்ளது. வெயில், மழைக்காலத்தில் பயணியர் மிகுந்த சிரமப்பட்டும் மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை.
31-Oct-2025