திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் பலியான பரிதாபம்
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார். சொத்து பிரச்னை தொடர்பாக தற்கொலை செய்தது தெரிய வந்தது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் (2ம் தேதி) இரவு, 7:00 மணிக்கு சென்ற ஒரு பெண் திடீரென தான் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடலில் தீ மளமளவென எரிய, மரண ஓலமிட்டவாறு, கலெக்டர் அலுவலக வாராண்டாவை நோக்கி ஓடினார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைவாக செயல்பட்டு, பெண்ணின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதன்பின், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இருப்பினும், அதே நாள் இரவு, 11:00 மணிக்கு பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில், தீக்குளித்து இறந்தவர், உடுமலையை சேர்ந்த பிரபாகரனின் மனைவி கவுசல்யா, 40 என்பது தெரிந்தது. வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சொத்து பிரச்னை இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பிரபாகரன் - கவுசல்யா தம்பதிக்கு, 10 மற்றும் 14 வயதில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே குடும்ப பிரச்னை அடிக்கடி ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் உடுமலையில் போலீசார் விசாரித்தனர். இதுதவிர, தந்தையிடம் சொத்து கேட்டால், அவர் கொடுத்தார். மீண்டும் கவுசல்யா தந்தையிடம் சொத்து கேட்டு தகராறு செய்தார். ஆனால், தரவில்லை. எனவே, தீக்குளிப்பது போல் அச்சுறுத்தலில் ஈடுபட்டால், சொத்து கொடுப்பார்கள் என்று நினைத்து தீக்குளித்து இருக்கலாம். கணவரின் வற்புறுத்தலால் செய்தாரா அல்லது தந்தை சொத்து பிரித்து கொடுக்க மறுத்த காரணத்தால் செய்தாரா என்பது முழு விசாரணைக்கு பின் தெரிய வரும். இறப்பதற்கு முன், 'என்னுடைய குழந்தைகளை பார்க்க வேண்டும். அவசரப்பட்டு செய்து விட்டேன்,' என்று மட்டும் கூறியுள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.