அடையாள அட்டை கிடைக்குமா? அர்ச்சகர் - பூசாரிகள் எதிர்பார்ப்பு
பல்லடம்: கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு கூறியதாவது:ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, ஏற்கனவே மனுவும் அளிக்கப்பட்ட நிலையில், அந்தந்த உதவி கமிஷனர்களுக்கு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சேலம் உதவி கமிஷனருக்கு மட்டுமே இதற்கான உத்தரவு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்ட உதவி கமிஷனர்களுக்கும், ஒரு கால பூஜை நடைபெறும் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குமாறு அனுமதி கடிதம் அனுப்ப வேண்டும். ஆனால், சேலத்தை தவிர எந்த உதவி கமிஷனர்களுக்கும் அனுமதி கடிதம் வழங்கப்பட்டதாக தெரியவில்லை.இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பூசாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே , சென்னை ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி, தமிழகம் முழுவதும் ஒரு கால பூஜை நடைபெறும் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.