அமராவதி ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் அச்சம்
உடுமலை, ; தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த, மடத்துக்குளத்தில் உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைத்து, வாகன ஓட்டுநர்கள் அச்சத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆறு குறுக்கிடுகிறது. ஆற்றின் குறுக்கே, 1984ல், மேம்பாலம் கட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால், பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.கனரக வாகனங்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால், பாலத்தின் ஓடுதளத்தில் விரிசல், அதிர்வு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த, 2015ல், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 76.92 லட்ச ரூபாய் செலவில், புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அதன்பின், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், குறிப்பிட்ட இடைவெளியில், போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால், ஓடுதளத்தில், ஆங்காங்கே குழிகள் உருவாகி, வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்துகிறது.பாதசாரிகளுக்கான நடைபாதை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. பழநிக்கு பாதயாத்திரை செல்பவர்கள் உள்ளிட்ட பாதசாரிகள், பாலத்தின் நடைபாதையில் செல்ல முடியாமல், ரோட்டிலேயே நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், விபத்து அபாயம் உள்ளது.மேலும், பாலத்தை ஒட்டி, ஆற்றின் கரையில், உள்ள சீமை கருவேல மரங்கள், தடுப்பு சுவர் அளவுக்கு உயர்ந்து வளர்ந்துள்ளது. இரவு நேரங்களில், விபத்துகளை தவிர்க்க, தேவையான பிரதிபலிப்பான், எச்சரிக்கை பலகையும் வைக்கப்படாமல் உள்ளது.தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தில், முக்கிய பங்கு வகிக்கும், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தை குறிப்பிட்ட இடைவெளியில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.