கல்லாகிப்போன கல் வாழை திட்டம் சுத்திகரிப்பு முனைப்பு வீணாகலாமா?
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலுார் அமைந்துள்ளதால் வளர்ந்து வரும் ஊராக உருவெடுத்துள்ளது. ஆண்டுதோறும் வீட்டு மனை வாங்கி புதிதாக வீடு கட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொங்கலுாரின் மையப்பகுதி பள்ளத்தில் அமைந்துள்ளது. மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மேடான இடத்தில் இருப்பதால், அங்கிருந்து வரும் கழிவுநீர் அனைத்தும் ஊரின் நடுவே தேங்கி நிற்கிறது. அங்கு துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், கோவில், குடியிருப்புகள் உள்ளன. இதனால், துர்நாற்றம், கொசு பெருக்கம் போன்றவை ஏற்பட்டது.கழிவுநீர் பிரச்னை தீவிர மானதால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டி மக்கள் குரல் கொடுத்தனர். முன்னாள் ஊராட்சி தலைவி சத்யா முயற்சியால் கழிவு நீரை சுத்திகரிக்க கல் வாழை நடும் திட்டம், 27.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்டது. கழிவுநீரை தொட்டியில் சேகரித்து அதில் கல் வாழை நடவு செய்யப்பட்டது.கழிவுகள் கல்வாழையால் உறிஞ்சப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட நீராக வெளியேற வழிவகை செய்யப்பட்டது.இத்திட்டம் வெற்றி அடைந்திருந்தால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கழிவுநீர் பிரச்னைக்கு இயற்கை முறையில் தீர்வு காண ஒரு முன்னோடி திட்டமாக இருந்திருக்கும். தற்போது கழிவு நீர் தொட்டிக்கு வரும் வழியில் ஏராளமான குப்பைகள் சேர்ந்து விடுகிறது. கழிவு நீரை வடிகட்டி தொட்டிக்குள் அனுப்ப சல்லடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து பராமரிக்காததால் கழிவுநீர் தொட்டிக்குள் செல்லாமல் திறந்தவெளியில் தேங்கி நிற்கிறது.கழிவு நீர் பிரச்னையை தீர்க்க கால் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தும், இயற்கை முறை சுத்திகரிப்பு திட்டம் கானல் நீராகி போகுமா என்பதுதான் பொதுமக்களின் ஐயம்.வெற்றி அடைந்திருந்தால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கழிவுநீர் பிரச்னைக்கு இயற்கை முறையில் தீர்வு காண ஒரு முன்னோடி திட்டமாக 'கல் வாழை நடும் திட்டம்' அமைந்திருக்கும்.